search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பானுமதி
    X
    பானுமதி

    கூடலூரில் மர்ம காய்ச்சலுக்கு பெண் பலி

    கூடலூரில் மர்ம காய்ச்சலுக்கு பெண் பலியானார். இதையடுத்து வீடு, வீடாக சுகாதாரத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
    கூடலூர்:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் எஸ்.எஸ். நகரை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவரது மனைவி பானுமதி(வயது 35). கூடலூர் பழைய பஸ் நிலைய பகுதியில் உள்ள தனியார் மருந்தகத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த 23-ந் தேதி பானுமதி மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் சிகிச்சை முடிந்து, வீடு திரும்பினார்.

    நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு மீண்டும் பானுமதிக்கு காய்ச்சல் ஏற்பட்டது. உடனே அவரை அதே தனியார் ஆஸ்பத்திரிக்கு உறவினர்கள் அழைத்து சென்றனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு பானுமதி கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதேபோன்று அப்பகுதியை சேர்ந்த பலரும் மர்ம காய்ச்சலால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அதற்கு சிகிச்சை பெற்றாலும், மீண்டும் காய்ச்சல் ஏற்படுவதால் டெங்கு பாதிப்பாக இருக்குமோ? என்று பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆர்.டி.ஓ. ராஜ்குமார், நகராட்சி ஆணையாளர் பாஸ்கரன், வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன், டாக்டர் பிரனேஷ், சுகாதார ஆய்வாளர் சரவணக்குமார் மற்றும் சுகாதாரத்துறையினர் எஸ்.எஸ்.நகரில் வீடு, வீடாக சென்று ஆய்வு செய்தனர்.அப்போது தண்ணீர் தேங்கும் வகையில் கிடந்த பிளாஸ்டிக் பொருட் கள், டயர்களை அப்புறப்படுத்தினர். மேலும் திறந்து கிடந்த தண்ணீர் தொட்டிகளை மூடினர். தொடர்ந்து சுகாதாரத்தை பேண பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினர்.

    அதன்பின்னர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 48-க்கும் மேற்பட்டவர்கள் மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வருவது தெரியவந்தது. அவர்களது ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது. மேலும் சளி மாதிரி எடுக்கப்பட்டு, குன்னூரில் செயல்படும் கொரோனா பரிசோதனை ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதுகுறித்து வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் கூறும்போது, அந்த பெண் உயிரிழப்பதற்கு முன்பு உடலில் வியர்வை நன்கு வெளியாகி உள்ளது. மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து இருக்கலாம். மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் சளி, ரத்த மாதிரி பரிசோதனை அறிக்கை வந்த பிறகே எந்த வகையான காய்ச்சல் என்பது தெரியவரும். அடுத்த 1 வாரத்துக்கு அப்பகுதி சுகாதாரத்துறையினரின் நேரடி கண்காணிப்பில் வைக்கப்பட உள்ளது என்றார். இதற்கிடையில் அப்பகுதி மக்களுக்கு நிலவேம்பு கசாய பொடிகளை நகராட்சி ஊழியர்கள் வீடு, வீடாக சென்று வழங்கினர். 
    Next Story
    ×