search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை
    X
    கொலை

    புதுவையில் பெட்ரோல் பங்க் அதிபர் கழுத்தை அறுத்து கொலை

    வில்லியனூர் அருகே பெட்ரோல் பங்க் அதிபர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேதராப்பட்டு:

    பாகூர் அருகே இருளன்சந்தை கிராமத்தை சேர்ந்தவர் புருஷோத்தமன் (வயது53). இவர் கரசூர்-சேதராப்பட்டு மெயின்ரோட்டில் பெட்ரோல் பங்க் நடத்தி வந்தார். இவருக்கு திலகவதி என்ற மனைவியும் தனபிரவீன் என்ற மகன் மற்றும் தனபிரியா என்ற மகள் உள்ளனர். தனபிரவீன் பி.டெக். படித்து முடித்து விட்டு சென்னையில் ஐ.ஏ.எஸ். பயிற்சி பெற்று வருகிறார்.

    கடந்த 3 ஆண்டுகளுக்குமுன்பு கருத்து வேறுபாடு காரணமாக புருஷோத்தமனின் மனைவி திலகவதி பிரிந்து சென்று விட்டார். இதனால் புருஷோத்தமன் தனது மகள் தனபிரியா மருத்துவ படிப்புக்காக அய்யங்குட்டிபாளையம் அமைதி நகரில் வாடகை வீட்டில் தனது தாய் மற்றும் மகன்-மகளுடன் வசித்து வந்தார்.

    நேற்று நள்ளிரவு 12 மணியளவில் பெட்ரோல் பங்கில் கணக்கு வழக்குகளை முடித்துகொண்டு புருஷோத்தமன் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டு இருந்தார். பத்துகண்ணு வழியாக வந்த போது திடீரென மர்ம நபர்கள் புருஷோத்தமனை வழிமறித்தனர். கண்இமைக்கும் நேரத்தில் அவர்கள் கத்தியால் புருஷோத்தமனை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் புருஷோத்தமன் இறந்து போனார்.

    அவ்வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து வில்லியனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிவேலு, சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றினர். பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் வழக்குபதிவு செய்து புருஷோத்தமனை கழுத்தை அறுத்து கொலை செய்த கொலையாளிகள் யார்? குடும்ப தகராறில் கூலிப்படையை ஏவி புருஷோத்தமன் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு யாரேனும் காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×