என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்தை தடுக்க ரப்பர் ரோல்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.
    X
    விபத்தை தடுக்க ரப்பர் ரோல்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

    கல்லட்டி மலைப்பாதையில் விபத்தை தடுக்க ரப்பர் ரோலர்கள்

    கல்லட்டி மலை பாதையில் வாகன விபத்தை தடுக்கும் வகையில் மாநில நெடுஞ்சாலைத்துறை மூலம் ரப்பர் ரோலர்கள் அமைக்கும் பணி தொடங்கபட்டுள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கல்லட்டி மலை பாதையில் 36 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன.

    மிகவும் ஆபத்தான இந்த மலை பாதையில் வாகனங்களை இயக்க அனுபவம் மிகுந்த ஓட்டுநர்களால் மட்டுமே முடியும். போதிய அனுபவமின்மையால் பல விபத்துகள் ஏற்பட்டு அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

    குறிப்பாக 2018-ஆம் ஆண்டு கார் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் சுமார் 52 மணி நேரத்திற்கு பிறகுதான் மீட்கப்பட்டது.

    இந்த கோர விபத்தையடுத்து அந்த மலை பாதை வழியாக மசினக்குடி, முதுமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு வாகனங்கள் செல்ல கட்டுப்பாடு விதிக்கபட்டுள்ளது. அதன் படி நீலகிரி மாவட்ட வாகனங்கள் மட்டும் இரு புறமும் சென்று வர அனுமதிக்கபடுகின்றன. பிற மாவட்டம் மற்றும் மாநில வாகனங்கள் மசினகுடியிலிருந்து ஊட்டிக்கு வர அனுமதிக்கப்படுகின்றன. ஆனால், கீழே செல்ல விடுவதில்லை.

    இதனால், மசினக்குடி பகுதியில் சுற்றுலா தொழிலை நம்பி உள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கர்நாடக உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளும் சுமார் 70 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டியுள்ளதால், கல்லட்டி மலை பாதையில் அனைத்து வாகனங்களும் சென்று வர அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    எனவே கல்லட்டி மலை பாதையில் வாகன விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை தடுக்கும் வகையிலும் அனைத்து வாகனங்கள் சென்று வரும் விதமாகவும் மாநில நெடுஞ்சாலைத்துறை மூலம் ரப்பர் ரோலர் கேஸ் பேரிகாரட் அமைக்கும் பணி தொடங்கபட்டுள்ளது. வெளிநாடுகளில் மட்டுமே உள்ள இந்த பாதுகாப்பு முறை தற்போது கல்லட்டி மலை பாதையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    மலை பாதையில் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக செல்லும் வாகனங்கள் அந்த ரப்பர் ரோலர் கேஸ் பேரிங்கில் மீது மோதும்போது வாகனங்களுக்கும் அதில் பயணம் செய்பவர்களுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் வடிவமைக்கபட்டுள்ளது. இந்த மலை பாதையில் உள்ள ஆபத்தான 8 கொண்டை ஊசி வளைவுகளில் இது போன்ற பாதுகாப்பு ரப்பர் தடுப்புகள் அமைக்க சுமார் ரூ. 1 கோடியே 75 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் வரவேற்பளித்துள்ளனர்

    Next Story
    ×