search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சமையல் கியாஸ் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்
    X
    சமையல் கியாஸ் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்

    சமையல் கியாஸ் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்

    தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் தொடங்கிய சமையல் கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
    நாமக்கல் :

    நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு தென்மண்டல பல்க் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சமையல் கியாஸ் டேங்கர் லாரிகள் மத்திய அரசின் பொதுத்துறை ஆயில் நிறுவனங்களில் இருந்து சிலிண்டரில் கியாசை நிரப்பும் மையங்களுக்கு (பாட்லிங் பிளாண்டுகளுக்கு) சமையல் கியாசை கொண்டு செல்லும் பணிக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கான பழைய டெண்டர் ஒப்பந்தம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 31-ந் தேதியுடன் முடிவடைந்தது. புதிய ஒப்பந்தத்தில் சுமார் 700 டேங்கர் லாரிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே அனைத்து வாகனங்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்கக்கோரி வேலைநிறுத்தம் செய்ய கடந்த 20-ந் தேதி நாமக்கல்லில் நடைபெற்ற சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி நேற்று காலை 6 மணி முதல் தமிழகம், கேரளா, புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா என 6 மாநிலங்களில் சமையல் கியாஸ் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் தொடங்கியது. இதையொட்டி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து பாட்லிங் பிளாண்டுகளுக்கு கியாசை ஏற்றாமல் டேங்கர் லாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதற்கிடையே ஆயில் நிறுவனங்கள் சார்பில் சமையல் கியாஸ் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்திற்கு தடை கேட்டு, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கு நேற்று நீதிபதி ஆதிகேசவலு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அவர், ஜம்மு-காஷ்மீர் மாநில ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி பால்வசந்தகுமாரை மத்தியஸ்தராக நியமித்து, உறுப்பினர்களின் குறைகளை கேட்டு அறிக்கை அளிக்க உத்தரவிட்டார். இதை கேட்ட சங்கத்தின் வக்கீல்கள் சுந்தரேசன், பிரசாத் ஆகியோர் வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக கோர்ட்டில் உத்தரவாதம் அளித்தனர்.

    இந்தநிலையில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் நாமக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த சங்கத்தின் செயலாளர் கார்த்திக் கூறியதாவது:-

    ஜம்மு-காஷ்மீர் மாநில ஓய்வுபெற்ற நீதிபதி பால்வசந்தகுமார் ஆயில் நிறுவன அதிகாரிகள் மற்றும் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்த மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டு உள்ளார். எனவே நாங்கள் வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்று கொண்டோம். ஓய்வுபெற்ற நீதிபதியிடம் எங்களது கோரிக்கையை கூறுவோம்.

    அதில் நல்ல முடிவு வரும் என நம்புகிறோம். வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டதால், உடனடியாக லாரிகளை இயக்குமாறு உரிமையாளர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி உள்ளோம். பொதுமக்களுக்கு இடையூறு கொடுப்பது எங்களின் நோக்கம் இல்லை. எங்களது வாழ்வாதாரம் பாதிக்கும் நிலை ஏற்பட்டதால் வேலைநிறுத்தம் செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது சங்கத்தின் தலைவர் பொன்னம்பலம், பொருளாளர் கணபதி ஆகியோர் உடன் இருந்தனர். சமையல் கியாஸ் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் தொடங்கிய சில மணி நேரங்களில் வாபஸ் பெறப்பட்டு விட்டதால், லாரி உரிமையாளர்கள் மீண்டும் பணியை தொடங்கி உள்ளனர். 
    Next Story
    ×