search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு: திருக்காரவாசல் கிராம மக்கள் விடிய- விடிய காத்திருப்பு போராட்டம்
    X

    ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு: திருக்காரவாசல் கிராம மக்கள் விடிய- விடிய காத்திருப்பு போராட்டம்

    திருவாரூர் அருகே திருக்காரவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை கைவிடக்கோரி 100-க்கும் மேற்பட்டோர் இரவு முழுவதும் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசலை மையமாக கொண்டு நாகை மாவட்டம் கரியாப்பட்டினம் வரை ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி அளித்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து நாள்தோறும் பல கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

    ஹைட்ரோகார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிடக்கோரி குடியரசு தினத்தன்று போராட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதனால் அனுமதியின்றி உண்ணாவிரதம் இருந்ததாக கூறி பி.ஆர்.பாண்டியன் உள்பட 200 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இந்த நிலையில் நேற்று தினம் திருக்காரவாசலில் நடைபெற்ற விவசாயிகளின் உண்ணாவிரத போராட்டத்தில் தினமும் மாலை 6 மணி தொடங்கி காலை 6 மணி வரை காத்திருப்பு போராட்டம் நடைபெறும். இந்த போராட்டம் மத்திய அரசு ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிடும் வரை நடைபெறும் என போராட்ட குழு அறிவித்திருந்தது.

    அதன்படி திருக்காரவாசல் கடைவீதியில் போராட்ட குழு தலைவர் தியாகராஜன் மற்றும் சுப்பையன் ஆகியோர் தலைமையில் விவசாயிகள் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.

    நேற்று மாலை தொடங்கிய இந்த போராட்டம் விடிய விடிய அதிகாலை வரை தொடர்ந்து நடந்தது. இதில் குழந்தைகளுடன் பெண்கள், ஆண்கள், கலந்து கொண்டனர். அங்கேயே படுத்து கொண்டும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி அளித்தமத்திய அரசையும், வேதாந்தா நிறுவனத்தையும் கண்டித்து கோ‌ஷங்களை எழுப்பினர்.

    இன்று காலை 6 மணியுடன் போராட்டம் நிறைவடைந்தது. இதையடுத்து இன்று மாலை 6 மணிக்கு மீண்டும் போராட்டம் நடைபெறும் என போராட்ட குழுவினர் அறிவித்துள்ளனர்.

    Next Story
    ×