search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவையில் கனமழை- பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
    X

    புதுவையில் கனமழை- பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

    புதுவையில் பெய்து வரும் கனமழையால் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. #Rain #puducherryRain #HolidayForSchools
    புதுச்சேரி:

    புதுவையில் கடந்த மே மாதத்திற்கு பிறகும் கோடை வெயிலின் தாக்கம் தொடர்ந்தது.

    புதுவையில் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் கோடை காலத்திற்கு நிகரான வெயில் அடித்தது. வழக்கமாக இந்த மாதங்களில் புதுவையில் காற்று வீசும், தென் மேற்கு பருவ மழை பெய்யும்.

    ஆனால், ஒரு சில நாட்கள் மட்டுமே லேசான மழை பெய்தது. பெரும்பாலும் சுட்டெரிக்கும் வெயிலே அடித்தது. இதனால், செப்டம்பர் மாத இறுதியில் தொடங்கும் வடகிழக்கு பருவ மழையாவது பெய்யுமா? என்ற கேள்வி எழுந்தது.

    இந்த நிலையில் செப்டம்பர் மாதம் முழுவதும் கோடை வெயிலை விட கூடுதலான உக்கிரத்துடன் வெயில் அடித்தது. வெயிலின் தாக்கத்தால் சாலைகளில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டது.

    அக்டோபர் மாதத்தின் தொடக்க நாட்களிலும் வெயிலின் தாக்கமே இருந்தது. இதே நிலையே நேற்றும் நீடித்தது. இந்த நிலையில் மதியத்திற்கு மேல் பருவம் மாற தொடங்கியது.

    வானில் கருமேகங்கள் தென்பட தொடங்கியது. லேசான குளிர்ந்த காற்றும் வீச தொடங்கியது. ஆனால், மழை பெய்யவில்லை. இரவு 10 மணிக்கு மேல் லேசான மழை பெய்ய தொடங்கியது.

    இரவு முழுவதும் அவ்வப்போது லேசான மழை பெய்த வண்ணம் இருந்தது. அதிகாலை 4 மணியளவில் மழையின் வேகம் கூடியது. கனமழை பெய்ய தொடங்கியது.

    தொர்ந்து காலை 6 மணி வரை கனமழை பெய்தது. இதனையடுத்து லேசான மழையும் அவ்வப்போது கன மழையும் பெய்த வண்ணம் உள்ளது. இதே நிலையே புதுவையின் புறநகர் மற்றும் கிராமப்புற பகுதிகளிலும் நிலவுகிறது.

    மழை காரணமாக நகரத்தின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்க தொடங்கி உள்ளது. சிவாஜி சிலை பகுதியில் மழை நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.

    இதேபோல் இந்திராகாந்தி சிலை, புஸ்சி சாலை உள்ளிட்ட நகர சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மழை காரணமாக அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

    காலை 8.15 மணிக்கே விடுமுறை அறிவிக்கப்பட்டதால் பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு மாணவர்கள் சென்று விட்டனர். பள்ளி சென்ற மாணவர்கள் மீண்டும் வீடு திரும்ப சிரமத்திற்கு உள்ளாகினர். #Rain #puducherryRain #HolidayForSchools
    Next Story
    ×