search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளிடம் பழைய பாலத்தின் தூணில் விரிசல் ஏற்பட்டு இருப்பதை படத்தில் காணலாம்
    X
    கொள்ளிடம் பழைய பாலத்தின் தூணில் விரிசல் ஏற்பட்டு இருப்பதை படத்தில் காணலாம்

    இடிந்து விழும் அபாயத்தில் கொள்ளிடம் பழைய பாலம் - 24 மணி நேரமும் அதிகாரிகள் கண்காணிப்பு

    கொள்ளிடம் ஆற்றில் 60 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசல் மேலும் அதிகரித்துள்ளது. அதிகாரிகள் அந்த பகுதியில் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். #Kollidamriver
    திருச்சி:

    கர்நாடக அணைகளில் அதிக அளவில் மழை பெய்யும் காலங்களில் காவிரியில் திறந்துவிடப்படும் தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து பின்னர் அங்கிருந்து திறக்கப்பட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை கடந்து திருச்சி வழியாக முக்கொம்பு வந்தடைகிறது. பின்னர் அங்கிருந்து காவிரியில் திறக்கப்படும் தண்ணீர் கல்லணைக்கும், கொள்ளிடத்தில் திறக்கப்படும் தண்ணீர் கடலுக்கும் செல்கிறது.

    காவிரி ஆற்றில் அதிக அளவில் நீர்வரத்து உள்ள காலங்களில் பாதுகாப்பு கருதி கொள்ளிடம் ஆற்றில் காவிரியை விட கொள்ளிடம் ஆற்றில் கூடுதல் தண்ணீர் திறக்கப்படும். இந்த தண்ணீர் கீழணைக்கு சென்று அங்கிருந்து வடவாறு (வீராணம்), ராஜன் வாய்க்கால் உள்ளிட்டவை நிரம்பி மீதமுள்ளவை கடலில் கலக்கிறது.

    கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 1924-ம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் ஸ்ரீரங்கத்தையும், நெ.1 டோல்கேட் பகுதியையும் இணைக்கும் வகையில் இரும்பு பாலம் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். பின்னர் அந்த பாலம் பயன்படுத்த முடியாத அளவுக்கு பலவீனம் அடைந்ததால் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சென்னை நேப்பியர் பாலம் போன்று திருச்சி கொள்ளிடம் ஆற்றில் புதிய பாலம் கட்டப்பட்டது.

    இதையடுத்து பழைய கொள்ளிடம் பாலத்தில் குறைவான எடைகொண்ட வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் மட்டும் சென்றுவர அனுமதிக்கப்பட்டன.

    இந்த நிலையில் மேட்டூர் அணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் வரத்து காரணமாக முக்கொம்பு மேலணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் 50 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இதனால் பழைய கொள்ளிடம் பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. கொள்ளிடம் இரும்பு பாலத்தில் சிமெண்டு மற்றும் கருங்கற்களால் கட்டப்பட்ட 23 தூண்களை கொண்ட பாலத்தின் 18-வது தூணில் விரிசல் ஏற்பட்டதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனே இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த திருச்சி நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் கிருஷ்ணசாமி, கண்காணிப்பு பொறியாளர் பழனி, உதவி பொறியாளர் வீரமணி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.



    நேரம் செல்ல செல்ல தூணில் ஏற்பட்ட விரிசல் அதிகமானது. இதையடுத்து கொள்ளிடம் பழைய பாலத்தின் வழியாக போக்குவரத்தை தடை செய்தனர். அந்த பாதையில் தடுப்பு அமைக்கப்பட்டது. திருவானைக்காவலில் இருந்து டோல் கேட், உத்தமர் கோவில், பிச்சாண்டார் கோவில், தாளக்குடி, கீரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.

    இன்று காலை நிலவரப்படி கொள்ளிடம் ஆற்றில் 60 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசல் மேலும் அதிகரித்து காணப்பட்டது. இதனால் பாலம் இடிந்து விழும் அபாயம் இருப்பதாகவும் அச்சம் எழுந்துள்ளது. அதிகாரிகள் அந்த பகுதியில் 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். #Kollidamriver


    Next Story
    ×