search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தல்லாகுளம் அய்யப்பன் கோவிலில் அர்ச்சகர் மாரிச்சாமி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார்.
    X
    தல்லாகுளம் அய்யப்பன் கோவிலில் அர்ச்சகர் மாரிச்சாமி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார்.

    மதுரை கோவிலில் பிராமணர் அல்லாத அர்ச்சகர் நியமனம் - ஆன்மீக பணியை சிறப்பாக செய்வதாக பேட்டி

    மதுரை கோவிலில் நியமிக்கப்பட்டுள்ள பிராமணர் அல்லாத அர்ச்சகர் மாரிச்சாமி, தான் ஆன்மீக பணியை சிறப்பாக செய்வேன் என்று கூறியுள்ளார். #Maduraitemple
    மதுரை:

    அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று கடந்த 2006-ம் ஆண்டு முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி உத்தரவிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    இதற்கிடையே பிராமணர் அல்லாதவர்கள் அர்ச்சகர் ஆவதற்கான பயிற்சியை 2008-ல் தமிழக அரசு நடத்தியது. இந்த பயிற்சியை 206 பேர் நிறைவு செய்தனர்.

    இந்த நிலையில் ஆகம விதிகளை மீறினால் பணி நீக்கம் செய்யலாம் உள்ளிட்ட சில நிபந்தனைகளுடன் பிராமணர் அல்லாதவர்களை அர்ச்சகராக நியமிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதையடுத்து அர்ச்சகர் பயிற்சி படித்த மதுரை எஸ்.ஆலங்குளத்தைச் சேர்ந்த மாரிச்சாமி என்பவரை மதுரை தல்லாகுளம் அய்யப்பன் கோவில் அர்ச்சகராக முதன் முறையாக தமிழக அரசு நியமித்துள்ளது.

    இதுகுறித்து மாரிச்சாமி நிருபர்களிடம் கூறிய தாவது:-

    எனது சொந்த ஊர் மதுரை அருகே உள்ள எஸ். ஆலங்குளம். எனக்கு 36 வயதாகிறது. பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவன். சிறு வயது முதலே ஆன்மீகத்தில் எனக்கு நாட்டம் அதிகம்.



    தமிழ் இலக்கியத்தில் பட்டம் பெற்றுள்ள நான் கடந்த 2007 முதல் 2009-ம் ஆண்டு வரை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்ற ஆன்மீக பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயிற்சி பெற்றேன்.

    இந்த பயிற்சியில் 206 பேர் கலந்து கொண்டோம். பயிற்சியை முழுமையாக முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது பயிற்சி முடிந்ததும் மதுரை புதூரில் உள்ள காளியம்மன் கோவிலில் பணியாற்றினேன்.

    இந்த நிலையில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை மதுரை தல்லாகுளத்தில் உள்ள அய்யப்பன் கோவிலுக்கு அர்ச்சகர் தேவை என்று விளம்பரம் செய்தது. அந்த விளம்பரத்தைப் பார்த்து விண்ணப்பித்தேன்.

    சிறிது நாளில் என்னை நேர்முகத்தேர்வுக்கு அழைத்தனர். தேர்வில் வெற்றி பெற்றதை தொடர்ந்து என்னை தல்லாகுளம் அய்யப்பன் கோவிலில் அர்ச்சகராக நியமித்துள்ளனர்.

    கடந்த 26-ந் தேதி முதல் இங்கு அர்ச்சகராக பணியாற்றி வருகிறேன். எனக்கு வழங்கப்பட்டுள்ள இந்த ஆன்மீகப்பணியை சிறப்பாக செய்வேன்.

    மேற்கண்டவாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து தமிழக அரசின் அர்ச்சகர் பயிற்சி மாணவர் சங்க மாநிலத் தலைவர் ரங்கநாதன் கூறுகையில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் போன்ற முக்கிய கோவில்களில் மாரிச்சாமி நியமிக்கப்பட்டு இருந்தால் மிக்க மகிழ்ச்சி அடைந்திருப்போம்.

    தமிழக அரசு மீதமுள்ள 205 பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித்தர வேண்டும் என்றார். #Maduraitemple


    Next Story
    ×