search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இறந்த மாணவன் ஜெயக்குமார்.
    X
    இறந்த மாணவன் ஜெயக்குமார்.

    அரூர் அருகே விளையாட்டு பயிற்சியின் போது மாணவன் மயங்கி கீழே விழுந்து மரணம்

    தருமபுரி மாவட்டம் அரூர் அருகே விளையாட்டு பயிற்சியின் போது 11-ம் வகுப்பு மாணவன் மயங்கி கீழே விழுந்து மரணமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    கம்பைநல்லூர்:

    தருமபுரி மாவட்டம் அரூரில் உள்ள அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் முத்துகுமார். கூலித்தொழிலாளி. இவரது மனைவி பவுத்தமணி.

    இவர்களது மகன் ஜெயக்குமார் (வயது 15). இவர் அரூரை அடுத்த எச்.தொட்டம்பட்டி பகுதியில் உள்ள ஜெயம் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார்.

    நேற்று மதியம் 2 மணியளவில் மாணவன் ஜெயக்குமார் பள்ளி மைதானத்தில் தடகள போட்டிக்காக முதலில் 100 மீட்டர் அளவில் ஓட்டப்பந்தயம் பயிற்சி பெற்றார்.

    அதனை முடித்தவுடனே மாணவன் ஜெயக்குமாரை உடனே பயிற்சியாளர் 200 மீட்டர் தூர அளவிற்கு பயிற்சி எடுக்க வேண்டும் என்று கூறி அவரை ஓட சொல்லியுள்ளார். உடனே மாணவன் மைதானத்தில் வேகமாக ஓடினார். அப்போது ஜெயக்குமார் திடீரென்று மயங்கிக் கீழே விழுந்தார்.

    இதனை கண்ட பயிற்சியாளர் நிர்வாகத்தினருக்கு தகவல் தெரிவித்தார். உடனே பள்ளி நிர்வாகத்தினர் மயங்கி கிடந்த மாணவனை பள்ளி அருகே உள்ள சின்னாங்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்து உள்ளனர்.

    மாணவன் உடல்நிலை மிகவும் மோசமான நிலை எட்டியதால் மேல் சிகிச்சைக்காக அரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அப்போது மாணவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    மாணவன் ஜெயக்குமார் இறந்த தகவலை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்ததாக அவரது பெற்றோரிடம் பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

    தகவலறிந்த முத்துகுமார், பவுத்தமணி மற்றும் உறவினர்கள் அரூர் அரசு மருத்துவமனைக்கு வந்து, மாணவன் பிணமாக கிடந்ததை கண்டு கதறி அழுதனர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த ஜெயக்குமாரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அப்பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி அரூர்-தருமபுரி சாலையில் திடீரென்று மறியலில் ஈடுபட்டனர்.

    இதனையடுத்து அரூர் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிடுமாறு கூறினர். அப்போது அவர்கள் ஜெயக்குமாருக்கு முறையான பயிற்சி அளிக்காததால் மயங்கி விழுந்து இறந்து விட்டார்.

    பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சாலை மறியலுக்கு முயற்சித்த மாணவனின் உறவினர்கள்.

    இதுகுறித்து பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறினர். விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்ததின் பேரில் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். பின்னர் போலீசார் ஜெயக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து அரூர் போலீஸ் நிலையத்தில் மாணவனின் உறவினர்கள் கொடுத்த புகாரின்பேரில் சந்தேக மரணம் (174) சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்து வருவாய் கோட்டாட்சியர் புன்னியக்கோடி, டி.எஸ்.பி. செல்லப்பாண்டியன் ஆகியோர் தலைமையில் தொடர்ந்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

    முதற்கட்டமாக போலீசார் நடத்திய விசாரணையில் நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு வந்த ஜெயக்குமார் மதியம் 2 மணியளவில் தடகளபோட்டிக்காக பயிற்சி மேற்கொண்டார். அப்போது மாணவன் சீருடையிலேயே முதலில் 100 மீட்டர் அளவில் ஒடி உள்ளான்.

    சிறிது நேரம் கூட ஓய்வில்லாமல் உடனே 200 மீட்டர் தொலைவிற்கு ஓட வேண்டும் என்று பயிற்சியாளர் கூறியதாக தெரியவந்தது. உடனே மாணவன் ஜெயக்குமார் மீண்டும் 200 மீட்டர் அளவிற்கு ஓடியபோது மைதானத்திலேயே மயங்கி கீழே விழுந்துள்ளார். அந்த மாணவனை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தபோது அங்கு சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

    இதுகுறித்து அரசு மருத்துவமனை டாக்டர், பள்ளி மாணவன் சீருடையிலேய 100 மீட்டர் அளவில் மைதானத்தை சுற்றி வந்துவிட்டு மீண்டும் 200 மீட்டர் தூரம் ஓடியபோது சரியான அளவில் ரத்தம் ஒட்டம் இல்லாமல் சீருடை இறுக்கியதன் காரணமாக ரத்த அழுத்தம் ஏற்பட்டு மயங்கி உள்ளான். அப்போது அவருக்கு சரியான சிகிச்சை அளிக்காததால் பரிதாபமாக இறந்துள்ளார் என்று கூறியதாக தெரியவந்தது.

    சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு பேசும்போது உயிரிழந்த மாணவன் ஓட்ட பந்தயத்திற்காக பயிற்சி எடுத்தபோது மயங்கி கீழே விழுந்துள்ளார் எனவும், அந்த மாணவனை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கும் போது உயிரிழந்ததாகவும் தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×