search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கல்லணை கால்வாய் கரை உடைப்பை விடிய விடிய சரிசெய்த விவசாயிகள்
    X

    கல்லணை கால்வாய் கரை உடைப்பை விடிய விடிய சரிசெய்த விவசாயிகள்

    கல்விராயன்பேட்டை கிராமத்தில் கல்லணை கால்வாய் தென்கரையில் உடைப்பு ஏற்பட்டதால் அதனை சரிசெய்யும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. #Kallanai
    பூதலூர்:

    தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து டெல்டா மாவட்ட பாசனத்துக்கு கடந்த 19-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.

    இதையடுத்து கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடம் ஆறுகளுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் தற்போது கடைமடை பகுதி வரை சென்று விட்டது.



    இதனால் டெல்டா மாவட்ட விவசாயிகள் சம்பா சாகுபடி பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    இந்த நிலையில் கல்லணை கால்வாய் கரையில் நேற்று காலை திடீரென உடைப்பு ஏற்பட்டது.

    தஞ்சை மாவட்டம் ஆலக்குடியை அடுத்த கல்விராயன்பேட்டை கிராமத்தில் கல்லணை கால்வாய் தென்கரையில் உடைப்பு ஏற்பட்டது. தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் உடைப்பில் இருந்து வெளியேறிய தண்ணீர் அருகே இருந்த வயல்களில் பாய்ந்தது. இதனால் ஆயிரக்கணக்கான ஏக்கரில் இருந்த வயல்களில் தண்ணீர் கடல் போல் தேங்கியது.

    இதைபார்த்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே டிப்பர் லாரிகள் மூலம் மண்ணை கொட்டி உடைப்பை சரிசெய்ய முயன்றனர். ஆனால் தண்ணீரின் வேகம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருந்ததால் உடைப்பை சரி செய்ய முடியவில்லை.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் பொதுப் பணித்துறை அதிகாரிகள் செந்தில் குமரன், ரவிச்சந்திரன், முருகேசன், சண்முகவேல், ஆகியோர் விரைந்து வந்து கரை உடைப்பு ஏற்பட்ட இடத்தை பார்வையிட்டனர்.

    இதற்கிடையே தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் கல்லணை கால்வாயில் இருந்து தண்ணீர் திறப்பு நேற்று மதியம் முதல் நிறுத்தப்பட்டது.

    இதையடுத்து தண்ணீர் வரத்து பாதிக்கும் மேல் குறைந்ததால் கரை உடைப்பை அடைக்கும் பணி மீண்டும் முழுவீச்சில் நடந்தது.

    இந்த நிலையில் தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், வல்லம் டி.எஸ்.பி. ஜெயசந்திரன் மற்றும் பொதுப் பணித்துறை அதிகாரிகள் இரவு முழுவதும் அங்கேயே முகாமிட்டு பணிகளை துரிதப்படுத்தினர்.

    மேலும் அமைச்சர் துரைக்கண்ணு சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டார்.

    அப்போது அமைச்சர் துரைக்கண்ணு கூறும் போது, ‘கல்விராயன் பேட்டை கல்லணை கால்வாய் கரை உடைப்பை சரிசெய்யும் பணி துரிதமாக நடந்து வருகிறது. இதற்காக கல்லணை கால்வாயில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டு விட்டது. இன்று மாலைக்குள் உடைப்பு சரிசெய்யப்பட்டு விடும்’. மேலும் மீண்டும் தண்ணீர் திறப்பது பற்றி பொதுப்பணி துறை அதிகாரிகள் முடிவு செய்வார்கள்’ என்றார்.

    நேற்று இரவு முதல் விடிய விடிய கரை உடைப்பு பணி மும்முரமாக நடந்தது. சுமார் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகளுடன், தஞ்சை தீயணைப்பு நிலைய வீரர்களும் பணியில் ஈடுபட்டனர்.

    கரை உடைப்பு அருகே சவுக்கு கட்டைகளை கட்டி அதன் அருகில் மணல் மூட்டைகள் அடுக்கி உடைப்பு சரிசெய்யும் பணி விடிய விடிய நடந்தது. இன்று காலையிலும் தொடர்ந்து நடந்தது.

    இதற்காக 10-க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள் , டிராக்டர்கள், பொக்லைன் ஆகியவை ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.

    பொதுப்பணித்துறை அதிகாரிகள் அந்த பகுதியிலேயே முகாமிட்டு பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர். #Kallanai
    Next Story
    ×