search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விடுதி உரிமையாளர் செந்தில் குமார்
    X
    விடுதி உரிமையாளர் செந்தில் குமார்

    ரஷிய இளம்பெண் கற்பழிப்பு வழக்கில் முதலில் தங்கியிருந்த விடுதி உரிமையாளர் கைது

    ரஷிய இளம்பெண் கற்பழிப்பு வழக்கில் முதலில் தங்கியிருந்த விடுதி உரிமையாளர் செந்தில் குமாரை போலீசார் கைது செய்தனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை செங்கம் சாலை கஸ்தூரி நகரில் உள்ள ஒரு தனியார் அபார்ட்மெண்டில் தங்கியிருந்த ரஷியாவை சேர்ந்த இளம்பெண் அலினா. கடந்த 16-ந் தேதி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகாயம் அடைந்து அலங்கோலமான நிலையில் சுய நினைவின்றி கிடந்தார்.

    உடனடியாக அவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவ மனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ மனையிலும் சேர்க்கப்பட்டார்.

    இதுகுறித்து திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் நடந்த சம்பவம் குறித்து ரஷிய பெண் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் அபார்ட்மெண்ட் உரிமையாளர் வேடநத்தம் பகுதியை சேர்ந்த பாரதி, அவரது அண்ணன் நீலகண்டன் (வயது 35), திருவண்ணாமலை செங்கம் ரோட்டை சேர்ந்த மணிகண்டன் (37), பாவாஜி நகரை சேர்ந்த வெங்கடேசன் (30) ஆகியோரை போலீசார் கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.

    ரஷிய பெண் சுற்றுலாவுக்காக கடந்த 10-ந் தேதி திருவண்ணாமலைக்கு வந்துள்ளார். முதலில் அவர் செந்தில்குமார் என்பவர் நடத்தி வந்த விடுதியில் தங்கியிருந்தார். அங்கு அதிக வாடகை வசூலித்ததால், பாரதியின் அபார்ட்மெண்டுக்கு கடந்த 12-ந் தேதி சென்றார்.

    வெளிநாட்டினர் விடுதிகளிலோ, வீடுகளிலோ தங்கினால் வெளிநாட்டினர் பதிவு அதிகாரிக்கு ‘பார்ம்-சி’ என்ற படிவத்தை வழங்க வேண்டும் என்பது சட்ட விதிமுறையாகும்.

    ரஷிய பெண் பலாத்கார சம்பவத்தை தொடர்ந்து அவர் தங்கி இருந்த 2 இடங்களில் இருந்தும் ‘சி’ படிவம் வழங்கப்பட்டு உள்ளதா? என்று போலீசார் விசாரணை நடத்தினர்.

    அதில் ரஷிய பெண் முதலில் தங்கி இருந்த விடுதியின் உரிமையாளர் திருவண்ணாமலையை சேர்ந்த செந்தில்குமாரும், 2-வதாக தங்கி இருந்த அபார்ட்மெண்டின் உரிமையாளர் பாரதியும் ‘சி’ படிவம் கொடுக்காதது தெரிய வந்தது. இதுகுறித்து செந்தில்குமார் மற்றும் பாரதி மீது திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் பாரதி ரஷிய பெண் பலாத்கார வழக்கில் கைதாகி சிறையில் உள்ளார். மற்றொருவரான செந்தில் குமாரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சையில் இருந்த அவர் பூரண குணமடைந்த நிலையில் கடந்த 20-ந் தேதி மாலையில் அவர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டார். இதை தொடர்ந்து அவர் ஆரணி கோர்ட்டில் ஆஜராகி மாஜிஸ்திரேட்டு மகாலட்சுமியிடம் வாக்குமூலம் கொடுத்தார்.

    சட்ட ரீதியான விசாரணைக்காக சில நாட்கள் ரஷிய பெண் இங்கு தங்க வேண்டிய நிலை உள்ளதால் அவர் மாவட்ட நிர்வாகம் மூலம் போலீஸ் பாதுகாப்புடன் திருவண்ணாமலையில் உள்ள ஒரு ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளார்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார், நீதிபதி முன்னிலையில் குற்றவாளிகள் அடையாள அணி வகுப்பு நடத்தவும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக விரைவில் குற்றப்பத்திரிகை கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் கூறினர்.



    Next Story
    ×