search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மெயினருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதையும், குளிக்க குவிந்த சுற்றுலா பயணிகளையும் காணலாம்.
    X
    மெயினருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதையும், குளிக்க குவிந்த சுற்றுலா பயணிகளையும் காணலாம்.

    குற்றால அருவிகளில் குளிக்க 3 நாட்களுக்கு பின் அனுமதி - சுற்றுலா பயணிகள் உற்சாகம்

    ஐந்தருவி மற்றும் பழையகுற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் அந்த இரு அருவிகளிலும் குளிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.
    தென்காசி:

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை பெய்யத்தொடங்கும் போது நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் சீசன் தொடங்கும். ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு ஆகிய 3 மாதங்கள் குற்றாலத்தில் சீசன் நிலவும். இந்த ஆண்டு மே மாத இறுதியிலேயே சீசன் தொடங்கியது.

    இதையடுத்து அனைத்து அருவிகளிலும் தண்ணீர் விழத்தொடங்கியது. ஜூன் மாதம் முழுவதும் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வந்த நிலையில், இந்த மாத தொடக்கத்தில் திடீரென குறைந்தது. ஒருவாரத்திற்கு பின் அருவிகளில் மீண்டும் தண்ணீர் கொட்டத்தொடங்கியது.

    சாரல் மழை, குளுகுளு காற்றுடன் குற்றாலத்தில் சீசன் களை கட்டியதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது. இந்நிலையில் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. குற்றாலம் மலைப்பகுதியில் கனமழை பெய்ததால் மெயினருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம் ஆகிய அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அந்த அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

    நேற்று 3-வது நாளாக அந்த அருவிகளில் குளிக்க தடை நீடித்ததால் குற்றாலத்திற்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். நேற்று இரவு ஐந்தருவி மற்றும் பழையகுற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் அந்த இரு அருவிகளிலும் குளிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.

    மெயினருவி தொடர்ந்து தண்ணீர் அதிகளவில் கொட்டியதால் அங்கு குளிக்க அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் இன்று காலை மெயினருவியில் வெள்ளப்பெருக்கு ஓரளவு குறைந்தது. இதனால் அந்த அருவியில் 3 நாட்களுக்கு பிறகு இன்று சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    மெயினருவியில் ஆர்ச்சை தொட்டபடி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் அருவியின் நடுப்பகுதிக்கு சென்று குளிக்க சுற்றுலா பயணிகளை போலீசார் அனுமதிக்கவில்லை. குற்றாலம் மலைப்பகுதி மட்டுமின்றி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து மலைப்பெய்து வருகிறது.

    மேலும் காற்றும் வேகமாக வீசி வருகிறது. மழை தொடர்ந்து பெய்வதால் அருவிகளில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என்பதால் தண்ணீர் வரத்தை போலீசார் தொடர்ந்து கண்காணித்தபடி உள்ளனர்.



    Next Story
    ×