search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜான்பாண்டியன்
    X
    ஜான்பாண்டியன்

    ஜான்பாண்டியன் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு: 20 பஸ்கள் உடைப்பு

    தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக பசுபதி பாண்டியன் ஆதரவாளர் கைது செய்யப்பட்டதை கண்டித்து 20 பஸ்கள் உடைக்கப்பட்டது.
    நெல்லை:

    தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் வீடு பாளை மனகாவலம் பிள்ளை நகரில் உள்ளது.

    நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் ஜான்பாண்டியன் வீட்டு மீது 2 பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு தப்பினர்.

    இதனை கண்டித்து ஜான் பாண்டியன் ஆதரவாளர்கள் அரசு பஸ் மீது கல்வீசி தாக்கினார்கள். இதில் கண்ணாடி உடைந்தது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு திருமண விழாவில் ஜான் பாண்டியன் ஆதரவாளர்களுக்கும், பசுபதி பாண்டியனின் தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் மாநில இளைஞரணி செயலாளர் கண்ணபிரான் ஆதரவாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டு கார் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சனை காரணமாக ஜான் பாண்டியன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து பாளை உதவி கமி‌ஷனர் விஜயகுமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராமையா மற்றும் போலீசார் கொண்ட தனிப்படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர்.

    இதில் மோட்டார் சைக்கிள் உரிமையாளரான மானூர் பள்ளமடையை சேர்ந்த பாலமுருகன் (27), மாவடியை சேர்ந்த பன்னீர் முருகன் (27) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். நேற்று இரவு தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு மாநில இளைஞரணி செயலாளரான கண்ணபிரான் கைது செய்யப்பட்டார்.

    இதற்கு கண்ண பிரானின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இந்த நிலையில் நேற்று இரவு பாளை, தச்சநல்லூர், ராமையன்பட்டி பகுதியில் கண்ணபிரான் ஆதரவாளர்கள் மோட்டார் சைக்கிளில் சென்று அரசு பஸ் மீது கல்வீசி தாக்கினார்கள். இதில் மாநகர பகுதியில் மட்டும் 9 பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது. நெல்லை புறநகர் பகுதியில் 3 அரசு பஸ்களின் கண்ணாடிகள் கல்வீசி உடைக்கப்பட்டன.

    இதுபோல இன்று அதிகாலையிலும் அரசு பஸ்கள் மீது கல்வீசப்பட்டன. இதில் 3 பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. மொத்தம் 20 பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக போலீசார் தனியாக வழக்குப்பதிவு செய்து கல்வீசியவர்களை தேடி வருகிறார்கள்.

    ஜான்பாண்டியன் வீட்டில் பெட்ரோல் வெடிகுண்டு வீசிய வழக்கில் பசுபதி பாண்டியன் ஆதரவாளர்களான நடுவக்குறிச்சி செல்லபாண்டி, சுள்ளான், படுகையூர் பாஸ்கர் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

    அவர்களை கைது செய்ய போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.

    நெல்லை, பாளை பகுதியில் கூடுதல் போலீசார் ரோந்து சுற்றி வருகிறார்கள். முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    Next Story
    ×