search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முழு சோற்றில் யானையை மறைக்க பார்க்கிறார் முதல்வர் எடப்பாடி - வேல்முருகன்
    X

    முழு சோற்றில் யானையை மறைக்க பார்க்கிறார் முதல்வர் எடப்பாடி - வேல்முருகன்

    பசுமை வழிச்சாலைக்கு விவசாயிகள் ஆதரவு என முதல்வர் எடப்பாடி கூறியிருப்பது, முழு சோற்றில் யானையை மறைப்பது போல் இருப்பதாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.
    நாகர்கோவில்:

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடந்தது. தமிழக வாழ்வுரிமை கட்சியினரும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி போராட்டம் நடத்தினர். இதில் உளுந்தூர் பேட்டை சுங்கச்சாவடி தாக்கப்பட்டது தொடர்பாக வேல்முருகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இதுபோல நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதாகவும் வேல்முருகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் போலீசார் அவரை கைது செய்து சென்னை ஜெயிலில் அடைத்தனர்.

    ஜெயிலில் இருந்த வேல்முருகனுக்கு கோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. அதன்படி அவர் நாகர்கோவிலில் தங்கி கோட்டார் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என உத்தரவிட்டது.

    இதையடுத்து வேல்முருகன் நாகர்கோவில் வந்தார். கோட்டார் போலீஸ் நிலையத்தில் இன்று காலை ஆஜராகி கையெழுத்திட்டார். அதன்பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக எங்கள் கட்சியினர் 11 பேரை போலீசார் கைது செய்தனர். அங்கிருந்த கண்காணிப்பு காமிரா காட்சிகள் மூலம் அவர்கள் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அப்போது எனக்கு அந்த சம்பவத்தில் தொடர்பு இல்லை என்று கூறப்பட்டது.

    அதன்பிறகு 4 நாட்களுக்கு பிறகு என்னை கைது செய்தனர். தூத்துக்குடி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க வந்த என்னை விமான நிலையத்தில் தடுத்து கைது செய்தனர். மத்திய அரசின் அழுத்தம் காரணமாக என்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக நான் துவண்டுவிட மாட்டேன். பொதுமக்களுக்காக என்னுடைய போராட்டம் தொடரும்.

    நான் ஜெயிலில் இருந்த போது திண்டுக்கல்லில் நடந்த டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டத்தின் போது வாகனம் ஒன்று எரிக்கப்பட்டது. இதுதொடர்பாக ஜெயிலில் இருந்த என் மீது வழக்கு போடப்பட்டது. இதுதொடர்பாக கோர்ட்டு என்னை கைது செய்ய தடை விதித்துள்ளது.

    தமிழகத்தில் போராட்டம் நடத்தும் பாரதிராஜா, சீமான், டைரக்டர் கவுதமன் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இது ஏற்புடையது அல்ல.

    சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு பொதுமக்கள், விவசாயிகள் ஆதரவு தெரிவிப்பதாக முதல்-அமைச்சர் கூறி உள்ளார். அங்கு 99.99 சதவீதம் மக்கள் இத்திட்டத்தை எதிர்க்கிறார்கள். சோற்றில் முழு பூசணிக்காயை மறைப்பதாகத்தான் கூறுவார்கள். ஆனால் முதல்-அமைச்சர் முழு யானையையே சோற்றில் மறைக்கிறார்.

    இப்போது முதல்-அமைச்சராக இருப்பதால் போலீஸ் பாதுகாப்புடன் சேலம் வருகிறார். பதவி இழந்தால் இவர் மக்களை சந்திக்க வர வேண்டும். தேர்தல் வரும் போதும் மக்களிடம்தான் வர வேண்டும். அப்போது மக்கள் யாரை ஆதரிக்கிறார்கள் என்பது தெரிய வரும்.

    கவர்னர் அவரது அதிகாரத்தை மீறி ஆய்வு நடத்தி வருகிறார். இதை தடுப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் தைரியமானவர்கள். எத்தகைய சவால்களையும் சந்திக்கும் மன வலிமை கொண்டவர்கள். கவர்னரின் மிரட்டலையும் அவர்கள் எதிர்கொள்வார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×