என் மலர்
செய்திகள்

பரங்கிப்பேட்டை அருகே கூத்தாண்டவர் கோவில் திருவிழாவில் ஆடி பாடிய திருநங்கைகள்
பரங்கிப்பேட்டை:
கடலூர் மாவட்டம் பரங்கி பேட்டை அருகில் உள்ள கொத்தட்டை கிராமத்தில் பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர்கோவில் உள்ளது.
இந்த கோவிலில் ஆண்டு தோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம் அதே போல் இந்த ஆண்டு திரு விழாவிற்கான கொடியேற்றும் நிகழ்ச்சி இந்த மாதம் 21-ந்தேதி நடைபெற்றது. அதன் பின்னர் 25-ந் தேதி அர்ச்சுணன் திரவுபதி திருக்கல்யாயணம் மற்றும் சாமி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருநங்கைகளுக்கு தாலிகட்டும் நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் திருநங்கைகள் வந்திருந்தனர்.
மேலும் மும்பை, கொல்கத்தா, புனே, டெல்லி, கேரளா, கர்நாடகா, உள்ளிட்ட வெளி மாநிலங்களை சேர்ந்த திருநங்கைகளும் ஏரளமானோர் கலந்து கொண்டனர். அவர்கள் தங்களை புதுபெண்கள் போல அலங்கரித்து கொண்டு கோவிலுக்கு சென்றனர். கோவிலில் பூசாரிகள் மூலம் தாலி கட்டிக் கொண்டனர். பின்னர் திருநங்கைகள் அனைவரும் ஆடி, பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதைத்தொடர்ந்து இன்று மாலை 5 மணி அளவில் அரவாண் களப்பலி நிகழ்ச்சி நடக்கிறது. இந்நிகழ்ச்சியில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொள்கிறார்கள்.
விழா ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர்கள் தில்லை கோவிந்தன், ராஜேந்திரன், சிவராஜ் ஆகியோர் செய்துள்ளனர். அந்த பகுதியில் பரங்கிப்பேட்டை இன்ஸ் பெக்டர் செல்வம் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.