என் மலர்
செய்திகள்

தமிழகத்தில் மீன் பிடி தடை காலம் தொடங்கியது: நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்- மீனவர்கள்
ராமேசுவரம்:
மீன்வளத்தை பாதுகாக்க வருடந்தோறும் ஏப்ரல் 15-ந்தேதி முதல் மே மாதம் இறுதிவரை தமிழக கடல் பகுதியில் விசைப்படகுகள் மூலம் மீன் பிடிக்க தடை விதிக்கப்படும். அதன்படி இந்த ஆண்டு மீன்பிடி தடை காலம் இன்று முதல் தொடங்கியது.
இதன் காரணமாக ராமேசுவரம் மண்டபம், தங்கச்சிமடம், பாம்பன் ஆகிய பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தப்பட்டு இருந்தன.
பரபரப்பாக காணப்படும் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது. மீன்பிடி தடை காலம் தொடங்கியுள்ளதால், கடலோர மாவட்டமான கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் கூலி வேலைக்கு செல்ல முடிவு செய்து உள்ளனர்.
விசைப்படகுகளை பழுது பார்க்கவும், வர்ணம் அடிக்கவும், மின் மோட்டார்கள், வலைகள், மீன்பிடி சாதனங்களை சரி செய்யவும் மீனவர்கள் மீன்பிடி தடை காலத்தை பயன்படுத்திக் கொள்வார்கள்.
மீன்பிடி தடை காலத்தில் மீனவர்கள் வாழ் வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசு தற்போது ரூ.5 ஆயிரம் நிவாரண தொகை வழங்கி வருகிறது. விலைவாசி உயர்ந்து வருவதால், நிவாரண தொகையை ரூ.8 ஆயிரமாக உயர்த்தி தர வேண்டும் என்று மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர். ஏப்ரல், மே மாதங்களில் மீன் வரத்து முற்றிலும் தடை படுவதால் மீன்களின் விலையும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.