என் மலர்
செய்திகள்

அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர் மர்ம மரணம்: நண்பர்களிடம் போலீசார் அதிரடி விசாரணை
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் முத்தையா நகரை சேர்ந்தவர் ரங்கபாஷியம் (வயது 35). இவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஏ.சி. மெக்கானிக்காக பணிபுரிந்து வந்தார்.
அதே பல்கலைக்கழகத்தில் வேலைசெய்து வரும் சிவபுரியை சேர்ந்த அன்பரசன்(37), சிதம்பரம் வடக்கு வீதியை சேர்ந்த அருள்குமார்(36), முத்தையா நகரை சேர்ந்த சிவகுருநாதன்(36) ஆகியோர் ரங்கபாஷியத்தின் நெருங்கிய நண்பர்கள் ஆவர்.
இவர்கள் 4 பேரும் சேர்ந்து தில்லைவிடங்கன் என்ற ஊருக்கு காரில் சென்றனர். இருள்சூழ்ந்த பகுதியில் 4 பேரும் சேர்ந்து மதுஅருந்தினர். மீண்டும் காரில் சிதம்பரம் நோக்கி புறப்பட்டனர்.
இந்த நிலையில் பலத்த காயங்களுடன் ரங்கபாஷியத்தை சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ரங்கபாஷியம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதில் அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள், இது பற்றி ரங்கபாஷியத்தின் குடும்பத்தினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து ரங்கபாஷியத்தின் மனைவி மலர் அண்ணாமலைநகர் போலீசில் புகார் செய்தார். அதில் அவர் எனது கணவரை அன்பரசன், அருள்குமார், சிவகுருநாதன் ஆகியோர் காரில் அழைத்துச் சென்று அவருக்கு மது வாங்கி கொடுத்துள்ளனர்.
பின்னர் அவரை 3 பேரும் சேர்ந்து அடித்துக் கொலை செய்துவிட்டனர். இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக அண்ணாமலைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை, முதல் கட்டமாக ரங்கபாஷியம் சாவில் சந்தேகம் இருப்பதாக வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினார். ரங்கபாஷியத்தின் நண்பர்கள் 3 பேரையும் பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் காரில் இருந்து கீழே தவறி விழுந்து ரங்கபாஷியம் காயம் அடைந்ததாக போலீசாரிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து ரங்கபாஷியம் கீழே விழுந்ததாக கூறிய இடத்துக்கு போலீசாரும், விழுப்புரம் மாவட்ட தடயவியல் நிபுணர் சண்முகம் தலைமையிலான குழுவினரும் நேரில் சென்று பார்வையிட்டனர்.
இதில் தடயவியல் நிபுணர்கள் சில தடயங்களை சேகரித்து உள்ளனர். தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.






