search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்செந்தூர் வியாபாரியை கள்ளக்காதலனை ஏவி தீர்த்துக்கட்டிய பெண்
    X

    திருச்செந்தூர் வியாபாரியை கள்ளக்காதலனை ஏவி தீர்த்துக்கட்டிய பெண்

    கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கள்ளக்காதலனை ஏவி இளம்பெண் கொன்ற சம்பவம் திருச்செந்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் காந்தி புரத்தை சேர்ந்தவர் முருகன் (வயது44). இவர் அப்பகுதியில் குளிர்பான கடை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு முருகன் கடையை பூட்டி விட்டு தனது மொபட்டில் திருச்செந்தூர் பஜாரில் பொருட்கள் வாங்க சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

    இதனால் அதிர்ச்சியடைந்த முருகனின் குடும்பத்தினர் அவரை அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தனர். எங்கும் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று காலை திருச்செந்தூர் -பாளையங்கோட்டை ரோட்டில் உள்ள மைய வாடிக்கு பின்புறம் காட்டுப் பகுதியில் முருகன் முகம் கல்லால் சிதைக்கப்பட்டும், கை, கழுத்து பகுதியில் அரிவாளால் வெட்டப்பட்டும் பிணமாக கிடந்தார்.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் ஆடிவேல் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது முருகனின் உடல் அருகே மொபட்டும், காலி மது பாட்டிலும் கிடந்தது. பின்னர் போலீசார் முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையே முருகனின் தம்பி சரவணன் திருச்செந்தூர் போலீசில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    முருகன் குளிர்பான கடையில் அதே பகுதியை சேர்ந்த ஐகோர்ட்டு ராஜா மகன் காசி (வயது 19) என்பவர் கடந்த சில மாதங்களாக வேலை பார்த்து வந்தார். அவர் மீது திருட்டு, வழிபறி உள்ளிட்ட வழக்குகள் இருந்ததால் அவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு முருகன் வேலையை விட்டு நிறுத்தி விட்டார்.

    இதனால் காசி, முருகன் மீது ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார். எனவே அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து முருகனை ஏமாற்றி காட்டு பகுதிக்கு அழைத்து சென்று வெட்டிக்கொன்றிருக்கலாம் என சந்தேகிக்கிறோம். எனவே இது குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும்.

    இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறியிருந்தார்.

    இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து தலைமறைவாக இருந்த காசியை தீவிரமாக தேடி வந்தனர். நேற்று இரவு திருச்செந்தூர் பகுதியில் பதுங்கி இருந்த காசியை போலீசார் மடக்கி பிடித்தனர். மேலும் திருச்செந்தூரை சேர்ந்த காசியின் நண்பரையும் போலீசார் பிடித்து தீவிர விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் கள்ளக்காதல் விவகாரத்தில் முருகன் கொலை செய்யப்பட்ட பரபரப்பு தகவல் வெளியானது.

    முருகன் குளிர்பான கடையில் வேலை பார்த்து வந்த காசிக்கும், முருகனின் மனைவிக்கும் இடையே சமீபகாலமாக கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த முருகன் தனது மனைவி மற்றும் காசியை கண்டித்துள்ளார். எனினும் கள்ளக்காதல் ஜோடி பேசி பழகி வந்துள்ளனர்.

    இதனால் ஆத்திரமடைந்த முருகன் , கடந்த சில நாட்களுக்கு முன்பு மனைவியுடன் தொடர்பு மற்றும் திருட்டு சம்பவங்களில் காசிக்கு தொடர்பு இருந்ததால் அவரை வேலையை விட்டு நீக்கி உள்ளார். இதனால் காசி கள்ளக்காதலியை பார்க்க முடியாமல் தவித்து வந்துள்ளார்.

    இதற்கிடையே ஒருநாள் முருகனின் மனைவியை காசி சந்தித்த போது இருவரும் சேர்ந்து முருகனை தீர்த்துக்கட்ட சதி திட்டம் தீட்டி உள்ளனர். அப்போது முருகனின் மனைவி எனது கணவரை கொன்றால் தான் நாம் இருவரும் சந்தோசமாக வாழ முடியும் என கூறியுள்ளார்.

    இதையடுத்து காசி தனது நண்பருடன் சேர்ந்து சம்பவத்தன்று முருகனை மது குடிக்க அழைத்து செல்வது போன்று நடித்து திருச்செந்தூர் மையவாடி காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று இருவரும் சேர்ந்து முருகனை அரிவாளால் வெட்டியும், கல்லால் அடித்து கொன்றதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. தொடர்ந்து காசி மற்றும் அவரது நண்பரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் முருகனின் மனைவியை பிடித்தும் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

    கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கள்ளக்காதலனை ஏவி இளம்பெண் கொன்ற சம்பவம் திருச்செந்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×