என் மலர்
செய்திகள்

அரியலூர் அருகே இளம்பெண்ணை ஆபாச படம் எடுத்து மிரட்டிய போலி டாக்டர் கைது
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இரும்புலிக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் ரகுபதி (வயது 54). இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.
ரகுபதி மருத்துவ புத்தகத்தை படித்து அதன்படி கிராமத்தில் மருத்துவம் பார்த்து வந்தார். மேலும் மருந்துக்கடையும் வைத்து நடத்தி வந்தார். இவரது மருந்து கடையில் பாளையக்குடி கிராமத்தை சேர்ந்த பிரியா (25, பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் வேலை பார்த்து வந்தார்.
பிரியா மீது மோகம் கொண்ட ரகுபதி, குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, அவரை பலவந்தமாக பலாத்காரம் செய்தார். மயக்கம் தெளிந்த பிரியாவிடம், நீ மயக்கமாக இருக்கும் போது உன்னை ஆபாசமாக படம் எடுத்து வைத்துள்ளேன்.
எனவே என்னை 2-வதாக நீ திருமணம் செய்து கொண்டால் நாம் இருவரும் சந்தோஷமாக இருப்போம் என ரகுபதி தெரிவித்துள்ளார். ஆனால் பிரியா மறுத்து விட்டார்.
மேலும் அவருக்கு திருமணம் செய்ய பேசி முடித்து நிச்சயதார்த்தம் நடக்க இருந்தது. அப்போது ரகுபதி மாப்பிள்ளை வீட்டாரிடமும், மாப்பிள்ளையிடமும் தான் செல்போனில் எடுத்து வைத்திருந்த படத்தை காண்பித்து நிச்சயதார்த்தத்தை நிறுத்தி விட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த பிரியா கடந்த 4-9-2015 அன்று ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ் பெக்டர் செல்வகுமாரி வழக்கு பதிவு செய்து ரகுபதியை தேடி வந்தார். ஆனால் அவர் போலீஸ் பிடியில் சிக்காமல் இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்றிரவு கல்லாத்தூர் பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்த ரகுபதியை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர் மீது மானபங்கபடுத்துதல், அவதூறாக பேசுதல், கொலை மிரட்டல், தனக்கு கீழ் வேலை செய்தவரை பலாத்காரம் செய்தல் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைதான ரகுபதி ஜெயங்கொண்டம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.






