என் மலர்
செய்திகள்

இளவரசன் மரணம் குறித்து விசாரணை: நீதிபதியின் முன்பு திவ்யா ஆஜராகி சாட்சியம்
தர்மபுரி:
தர்மபுரியை அடுத்த நத்தம் காலனியை சேர்ந்த இளவரசன் கடந்த 2013-ம் ஆண்டு ஜூலை மாதம் 4-ந் தேதி அரசு கலைக்கல்லூரி பின்புறம் உள்ள ரெயில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார்.
இவரது மரணம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற சென்னை ஐகோர்ட்டு நீதிபதி சிங்காரவேலு தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு நியமித்தது. நீதிபதி சிங்காரவேலு ஏற்கனவே சென்னையில் விசாரணை நடத்தினார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு தர்மபுரியில் அவர் விசாரணை நடத்தினார்.
கடந்த செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் அவர் தர்மபுரி வந்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இளவரசனின் தந்தை இளங்கோ, தாயார் கிருஷ்ணவேணி உள்ளிட்டோர் சாட்சியம் அளித்தனர்.
இளவரசனை காதல் திருமணம் செய்து கொண்டு பின்னர் பிரிந்து சென்ற திவ்யா நேற்று நீதிபதி முன்பு ஆஜராகி சாட்சியம் அளித்தார். திவ்யாவின் தாயார் தேன்மொழி மற்றும் பா.ம.க. மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பிரமுகர்கள் சிலரும் சாட்சியம் அளித்தனர்.
இதுவரை 79 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. மீண்டும் ஒருமுறை நீதிபதி சிங்காரவேலு தர்மபுரி வந்து விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.