search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பலகோடி சொத்துக்காக கல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியர் கொலை
    X

    பலகோடி சொத்துக்காக கல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியர் கொலை

    பலகோடி சொத்துக்காக கல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியர் கொன்று புதைக்கப்பட்டது 4 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தெரியவந்தது. இதுதொடர்பாக பெண் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் டி.கே.நம்பி தெருவை சேர்ந்தவர் வெங்கடாசலம். ஓய்வு பெற்ற வருவாய்துறை அதிகாரி. இவருடைய மகன் எல்லப்பன் (வயது 46). கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் ஊழியராக வேலைபார்த்து வந்தார்.

    எல்லப்பன் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. இதனால் அவருடைய மனைவி அங்கயற்கன்னி 2006-ம் ஆண்டு விவாகரத்து பெற்று தன் தந்தை வீட்டுக்கு சென்றுவிட்டார். தந்தை இறந்து விட்டதால் எல்லப்பன் தன் தாயார் ராஜலட்சுமியுடன் வசித்து வந்தார்.

    இந்நிலையில் எல்லப்பன் 2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திடீரென காணாமல் போனார். அதே ஆண்டு மே மாதம் ராஜலட்சுமி இறந்து விட்டார். தாய் இறப்புக்கு கூட எல்லப்பன் வராததால் அவருடைய சித்தப்பா சின்ன காஞ்சீபுரம் போலீசில் எல்லப்பன் காணாமல் போனது குறித்து புகார் அளித்தார்.

    எல்லப்பனுக்கு காஞ்சீபுரத்தில் 4 வீடுகள், வேலூரில் 1 வீடு, ஏராளமான நகைகள், வங்கியில் ரூ.1 கோடியே 25 லட்சம் ரொக்கம் உள்பட பல கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளன. மாமனார், மாமியார் இறந்து விட்டதாலும், கணவர் காணாமல் போய் விட்டதாலும் எல்லப்பன் பெயரில் உள்ள சொத்துகளை அங்கயற்கன்னி தன் மகன் பெயருக்கு மாற்ற ஒரு மாதத்துக்கு முன்பு ஏற்பாடு செய்தார். அப்போது அனைத்து சொத்துகளும் தேன்மொழி என்ற பெயரில் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது.

    இது குறித்து காஞ்சீபுரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத்திடம் அங்கயற்கன்னி சில நாட்களுக்கு முன்பு புகார் அளித்தார். அதன் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வந்தது. எல்லப்பனின் வீட்டில் பல ஆண்டுகளாக வாடகைக்கு குடியிருந்த தேன்மொழியை (56) போலீசார் நேற்று முன்தினம் பிடித்து விசாரித்தனர்.

    அப்போது சொத்துக்காக அவர் உள்பட 5 பேர் சேர்ந்து எல்லப்பனை மண்வெட்டியால் அடித்து கொன்று விட்டு காஞ்சீபுரத்தை அடுத்த குருவிமலை பாலாற்றில் புதைத்தது தெரியவந்தது. இதையடுத்து காஞ்சீபுரத்தை சேர்ந்த தேன்மொழி, களக்காட்டூரை சேர்ந்த செல்லப்பன் (50), ஏழுமலை (55), விச்சந்தாங்கல் பகுதியை சேர்ந்த வெங்கடகிரி என்கிற கோபி (40), காஞ்சீபுரத்தை சேர்ந்த சேகர் (56) ஆகிய 5 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.

    பின்னர் எல்லப்பனை கொலை செய்து புதைத்ததாக கூறப்படும் குருவிமலை பாலாற்றில், உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத், இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி, வாலாஜாபாத் தாசில்தார் சீதாலட்சுமி ஆகியோர் முன்னிலையில் தோண்டும் பணி நடந்தது. ஆனால் அங்கு எதுவும் கிடைக்கவில்லை.

    பின்னர் காஞ்சீபுரம் குற்றவியல் கோர்ட்டில் தேன்மொழி உள்பட 5 பேரையும் போலீசார் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். 4 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனதாக கருதப்பட்டவர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் தற்போது அம்பலமானது காஞ்சீபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
    Next Story
    ×