என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாளவாடி வனப்பகுதியில் மீண்டும் காட்டுத்தீ: 500 ஏக்கர் மரங்கள் எரிந்து நாசம்
    X

    தாளவாடி வனப்பகுதியில் மீண்டும் காட்டுத்தீ: 500 ஏக்கர் மரங்கள் எரிந்து நாசம்

    தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள தாளவாடி வனப்பகுதியில் மீண்டும் காட்டுத்தீ ஏற்பட்டு உள்ளது. இந்த தீ விபத்தில் 500 ஏக்கர் பரப்பளவிலான மரங்கள் எரிந்து நாசம் ஆனது.
    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள வனப்பகுதி காரப்பள்ளம். இந்த ஊர் வழியாகத்தான் திண்டுக்கல்-மைசூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. பருவமழை பொய்த்ததால் தமிழ்நாடு மற்றும் கர்நாடக வனப்பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டு உள்ளது. இதனால் வனப்பகுதியில் உள்ள செடி, கொடிகள் காய்ந்தும், மரங்கள் பட்டுப்போயும் உள்ளன.

    கடந்த 23-ந் தேதி தாளவாடி அருகே உள்ள தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள பேடுகுழி வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டது. தொடர்ந்து 4 நாட்கள் எரிந்த நிலையில் வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ கட்டுக்குள் வந்தது. இந்த தீ விபத்தால் பேடுகுழி வனப்பகுதியில் 1,000 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவிலான அரியவகை மரங்கள் முற்றிலும் எரிந்து நாசம் ஆனது. இதேபோல் ஆசனூர் மலைப்பகுதியில் 200 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவிலான மரங்கள் எரிந்து நாசம் ஆனது.

    இந்த நிலையில் தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள காரப்பள்ளம் வனப்பகுதியில் நேற்று முன்தினம் காலை 10 மணி அளவில் மீண்டும் காட்டுத்தீ திடீரென ஏற்பட்டது. பின்னர் இந்த தீ மளமளவென வனப்பகுதியின் பல்வேறு இடங்களிலும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. காரப்பள்ளத்தின் சமவெளி பகுதி கர்நாடக மாநிலத்திலும், மலைப்பகுதி தமிழ்நாட்டின் ஆசனூர் வனச்சரகத்திலும் உள்ளது.

    முதலில் சமவெளிப்பகுதியில் தீ பிடித்து உள்ளது. இதுபற்றி அறிந்ததும் கர்நாடக வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீயின் வேகம் அதிகமாக இருந்ததால் அவர்களால் காட்டுத்தீயை அணைக்க முடியவில்லை. இதில் 250 ஏக்கர் பரப்பளவிலான சமவெளி பகுதி எரிந்து நாசம் ஆனது. மேலும் அங்கிருந்து ஆசனூர் வனப்பகுதிக்கும் தீ பரவியது.

    தொடர்ந்து 2-வது நாளாக காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் எரிந்ததால் தமிழக மற்றும் கர்நாடக வனத்துறையினர் தீயை அணைக்க முடியாமல் திணறி வருகிறார்கள். இதில் ஆசனூர் வனப்பகுதியில் 250 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவிலான மரங்கள் எரிந்து நாசம் ஆனது. 2 மாநில வனப்பகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவிலான மரங்கள் எரிந்து நாசம் ஆனது.

    காற்றின் காரணமாக மூங்கில் மரங்கள் அசைந்து உராய்வு ஏற்பட்டு தீப்பிடித்ததா? அல்லது வனப்பகுதிக்குள் கால்நடைகளை மேய்க்க சென்றவர்கள் பீடி குடித்துவிட்டு போட்டதில் தீப்பற்றியதா? சமூக விரோதிகள் யாராவது தீ வைத்தார்களா? என 2 மாநில வனத்துறையினரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×