என் மலர்
செய்திகள்

கோபி தொகுதியில் கே.ஏ.செங்கோட்டையனுக்கு எதிர்ப்பு வலுக்கிறது
கோபி:
அ.தி.மு.க.வில் கட்சி மாறாத சீனியர் எம்.எல்.ஏ. என்ற பெயருடன் கோபி தொகுதியில் பொது மக்களிடம் மிகுந்த மதிப்பும், மரியாதையுடனும் வலம் வந்து கொண்டிருப்பவர் செங்கோட்டையன்.
இவர் 1977ம் ஆண்டு எம்.ஜி.ஆர். முதன் முதலில் தமிழக முதலமைச்சராகப் பொறுப்பெற்ற போது சத்தியமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர், 1980, 1984, 1989, 1991, 2006, 2011, மற்றும் 2016 ம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத்தேர்தலில் கோபிசெட்டிபாளையம் தொகுதி எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவர் 1991 முதல் 1996 ம் ஆண்டு வரை போக்குவரத்து மற்றும் வனத்துறை அமைச்சராகவும், 2011 முதல் 2012 ம் ஆண்டு ஜூலை மாதம்வரை வேளாண்மைத்துறை அமைச்சர்,தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர், மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் என முதலமைச்சர் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் மந்திரியாக பணியாற்றியுள்ளார்.
மேலும், கடந்த காலங்களில் இவர் ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சார கூட்டங்களை எவ்வாறு நடத்துவது என்று திட்டமிட்டு சிறந்த முறையில் செயல்படுத்தியவர் என்ற பெயரும் இவருக்கு உண்டு. இவை தவிர அ.தி.மு.க.வில் மாவட்டச் செயலாளர், தலைமை நிலைய செயலாளர் உட்பட பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளார்.
எம்.ஜி.ஆர். மறைவிற்குப் பிறகு 1989-ம் ஆண்டு அ.தி.மு.க. ஜெ. ஜா என இரண்டு அணிகளாக பிரிந்த போது இவர் அ.தி.மு.க. வை மீட்க ஜெயலலிதாவிற்கு பக்கபலமாக இருந்து செயல்பட்டுள்ளார்.
இந்நிலையில், இவர் ஜெயலலிதாவால் கடந்த 2012 ம் ஆண்டு வருவாய்த்துறை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு கட்சியில் இவர் ஓரங்கட்டப்பட்டார். 2016 ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வில் இவர் மீண்டும் சீட் பெற்றுகோபி செட்டிபாளையம் சட்ட மன்றத் தொகுதி உறுப்பினரானார்.
அப்போதும் இவருக்கு அமைச்சர் பதவி கிடைக்க வில்லை. இதனால், இவரும், இவரது ஆதரவாளர்களும் உற்சாகம் குறைந்து செயல் பட்டுவந்தனர். மேலும், இவருக்கு அமைச்சர் பதவி கிடைக்காமல் போனதற்கு சசிகலாதான் காரணம் என்றும் பரவலாகப் பேசப்பட்டது.
இந்நிலையில், முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த பின்னர், அ.தி.மு.க.வையும், ஆட்சியையும் கைப்பற்ற சசிகலா முன்வந்த போது செங்கோட்டையன், சசிகலாவிற்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வந்தார்.
இவரது நிலைப்பாட்டை கோபி தொகுதி மக்கள் அங் கீகரிக்கவிலலை. ஏற்கவும் இல்லை. காரணம் மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் 74 நாட்கள் சிகிச்சை பெற்றபோது அவரது போட்டோவைகூட வெளியேவிடாமல் தடுத்து வைத்து விட்டார். சட்ட சபையில் சிங்கம் போல் செயல்பட்டு வந்த முதல்வர் ஜெயலலிதா இறந்து விட்டார் என்பதை எங்களால் நம்ப முடியவில்லை. ஜெயலலிதாவின் மறைவிற்கு யார் காரணம்? என பல்வேறு வதந்திகள் உலாவரும் வேளையில், சசிகலாவிற்கு, கோபி தொகுதி எம்.எல்.ஏ. செங்கோட்டையன் ஆதரவளித்திருப்பது தொகுதி மக்களிடையே இவர் மீது வெறுப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், கோபியைச் சேர்ந்த சத்தியபாமா எம்.பி. (திருப்பூர் தொகுதிஎம்.பி.) நேற்று முதலமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.
கோபி தொகுதியில் செங்கோட்டையனுக்கு பரவலாக எதிர்ப்புகிளம்பியுள்ளது. அவர் மீண்டும் தொகுதிக்கு வந்தால், மக்களை முன்பு போல் சந்திக்க முடியமா? என்பது மிகப்பெரிய கேள்விக் குறியாகியுள்ளது.






