search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரை மாவட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரிக்கும் அ.தி.மு.க. தொண்டர்கள்: எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கிடைக்குமா?
    X

    மதுரை மாவட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரிக்கும் அ.தி.மு.க. தொண்டர்கள்: எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கிடைக்குமா?

    மதுரை மாவட்டத்தில் அ.தி.மு.க. தொண்டர்களின் ஆதரவு ஓ.பன்னீர் செல்வத்துக்கு அதிகரித்து வருகிறது. ஆனால் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கிடைக்குமா? என்று கேள்வி எழுந்துள்ளது.

    மதுரை:

    அ.தி.மு.க.வில் முதல் -அமைச்சர் பதவியை யார் பிடிப்பது என்பதில் தற்போதைய முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலாவுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

    இதனால் தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவை 2 பேரும் தனித்தனியாக சந்தித்து ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கும்படி கோரிக்கை வைத்துள்ளனர். அ.தி.மு.க.வை பொறுத்த வரை அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் பெரும் பான்மையானோர் எங்களை ஆதரிப்பார்கள் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறி வருகிறார். ஆனால் சசிகலா, அனைத்து எம்.எல்.ஏ.க்களும் எங்கள் பக்கம் இருக்கிறார்கள் என்று ஆதரவு பட்டியலை கவர்னரிடம் சமர்ப்பித்துள்ளார்.

    அ.தி.மு.க.வை பொறுத்தவரை அடிமட்ட தொண்டர்கள் ஓ.பன்னீர் செல்வம் முதல்வர் பதவியில் தொடர்வதையே விரும்பு வதாக கருத்து தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து சட்டமன்ற உறுப்பினர்களிடம் செல்போன், வாட்ஸ்-அப் மூலம் தங்கள் விருப்பத்தினை தெரிவித்து வருகிறார்கள். பொதுமக்கள் மற்றும் தொண்டர்களின் கருத்துக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் மதிப்பளிப்பார்களா? என்பது போகபோகத்தெரியும்.

    மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் மதுரை மத்தி மற்றும் மதுரை கிழக்கு தொகுதிகளில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. மற்ற 8 தொகுதிகளிலும் அமைச்சர் செல்லூர் ராஜூ (மதுரை மேற்கு), அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் (திருமங் கலம்), சரவணன் (மதுரை தெற்கு), ஏ.கே.போஸ் (திருப்பரங்குன்றம்), ராஜன் செல்லப்பா (மதுரை வடக்கு), நீதிபதி (உசிலம்பட்டி), மாணிக்கம் (சோழவந்தான்), பெரியபுள்ளான் (மேலூர்) அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

    இதில் சோழவந்தான் எம்.எல்.ஏ. மாணிக்கம் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவை தெரிவித்துள்ளார். மற்ற 7 பேரும் சசிகலாவுக்கு முழுமையான ஆதரவை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

    தொண்டர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மனமாற்றம் எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் ஏற்படுமா? என்பது இன்னும் ஓரிரு நாளில் தெரியவரும். ஆனாலும் அ.தி.மு.க. நிர்வாகிகளும் ஒரு பிரிவினர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

    திருமங்கலம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. முத்துராமலிங்கம் உள்ளிட்ட பிரமுகர்கள் பகிரங்கமாக ஆதரவை ஓ.பன்னீர்செல்வத்துக்கு அறிவித்துள்ளனர். சில நிர்வாகிகள் நிலைமையை ஆராய்ந்து முடிவு செய்யலாம் என்று காத்திருக்கிறார்கள்.

    Next Story
    ×