search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்டாவில் தொடர் மழை: அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்கள் பாதிப்பு
    X

    டெல்டாவில் தொடர் மழை: அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்கள் பாதிப்பு

    டெல்டா மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பல இடங்களில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெல் பயிர்கள் சாய்ந்து விட்டன. இதனால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் கடந்த புதன் கிழமை முதல் தொடர்ந்தும், விட்டு விட்டும் மழை பெய்து வருகிறது. இந்த தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் பல இடங்களில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெல் பயிர்கள் சாய்ந்து விட்டன.

    ஏற்கனவே சம்பா சாகுபடியில் 70 சதவீதத்துக்கும் அதிகமான பயிர்கள் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக கருகிவிட்டன. இந்த நிலையில், பருவம் தவறி பெய்து வரும் மழையால் மோட்டார் பம்புசெட் மூலம் மேற்கொள்ளப்படும் சம்பா, தாளடி நெல் பயிர்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.

    தண்ணீர் பற்றாகுறை நிலவிய நிலையில் மோட்டார் பம்புசெட் மூலம் மிகுந்த சிரமத்துக்கு இடையே செய்யப்பட்ட நெல் சாகுபடியும் இப்போது மழையால் சாய்ந்து விட்டதால், மகசூல் இழப்பு ஏற்படும் என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர்.

    கும்பகோணம், திருவிடை மருதூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் சம்பா சாகுபடி அறுவடைக்கு விவசாயிகள் தயாராக இருந்தனர். ஆனால் அப்பகுதிகளில் 5-நாள் பெய்த கன மழையால் பயிர்கள் அனைத்தும் நீரில் முழ்கின.

    வயலில் நிரம்பி உள்ள தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்றுகிற நிலைமையில் விவசாயிகள் இருக்கின்றனர்.

    கும்பகோணம் தாராசுரத்தில் ராஜராஜ சோழன் கட்டிய 1000 வருடங்களை கடந்து கால சுவடுகளை சுமந்து நிமிர்ந்து நிற்கும் உலக புகழ் பெற்ற ராவதீஸ்வரர் கோவில் உள்ளது. இப்பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த மழையின் காரணமாக கோவிலின் வாயிலில் சூழ்ந்து உள்ள மழை நீரால் பக்தர்கள் பெரும் சிரமத்துடன் தண்ணீரில் இறங்கி சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

    தேங்கி நிற்கும் மாசு அடைந்த இந்த நீரால் பல தொற்று நோய்கள் வர வாய்ப்புகளும் உள்ளன என்பதால் இதற்கு உடனடியாக தாராசுரம் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தஞ்சை மாவட்டம் அய்யம் பேட்டை பகுதிகளில் கடும் வறட்சிக்கிடையே மின்மோட்டார் மற்றும் ஆயில் என்ஜின்கள் மூலம் விவசாயிகள் சம்பா நெற்பயிரை காப்பாற்றி வந்தனர். முன்பட்ட சம்பா சாகுபடி நெற்கதிர்கள் முற்றி அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. இந்நிலையில் இப்பகுதியில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு பெய்து வரும் கனமழையால் நெற்பயிர்கள் சாய்ந்து தண்ணீரில் மூழ்கி கிடக்கிறது.

    மூழ்கிய நெற்பயிர்களை காப்பாற்ற வயலில் உள்ள நீரை வடிகட்டும் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். மேலும் சம்பா நெல் அறுவடை சமயத்தில் உளுந்து விதைப்போம். ஆனால் இந்தாண்டு வயலில் தண்ணீர் தேங்கி நிற்பதால் உளுந்து விதைப்பதற்கும் ஏற்ற சூழ்நிலை உருவாகவில்லை. எனவே மிகுந்த மனஉளைச்சலில் உள்ளோம் என கணபதி அக்ரஹாரம் பகுதி விவசாயி சங்கர் கூறினார்.

    திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக பலத்த மழை பெய்தது. நேற்று லேசாக தொடங்கிய மழை பின்பு பலத்த மழையாக பெய்ய தொடங்கியது.

    இந்த மழையை பொதுமக்களும், விவசாயிகளும் பெரிதும் வரவேற்கின்றனர். மழை இல்லாமல் இருந்ததற்கு கடந்த 5-நாள் பெய்த மழை ஆறுதல் அளிக்கிறது என்று விவசாயிகளும், பொது மக்களும் தெரிவித்தனர்.

    நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறையில் இன்று காலை பலத்த மழை பெய்தது. இதனால் ரோடுகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சீர்காழியில் நேற்று நள்ளிரவு முதல் காலை வரை பலத்த மழை பெய்தது. சீர்காழியில் பம்பு செட் மூலம் சம்பா சாகுபடி செய்துள்ள வயல்களில் மழை காரணமாக பயிர்கள் சாய்ந்துள்ளன. கொள்ளிடம், வைத்தீஸ்வரன் கோவில், திருவெண்காடு ஆகிய இடங்களிலும் இரவு மழை பெய்தது.

    வேதாரண்யம், நாகப்பட்டினம், உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்யவில்லை.

    Next Story
    ×