search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பு
    X

    பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பு

    சென்னை குடிநீர் தேவைக்காக பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு நேற்று காலை லிங்க் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது.
    ஊத்துக்கோட்டை:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி ஏரியின் நீர்மட்டம் வெகுவாக குறைந்ததால் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி கண்டலேறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடவேண்டும் என்று முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவுக்கு கோரிக்கை விடுத்தார்.

    இதைத் தொடர்ந்து கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது வினாடிக்கு 1700 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.

    இந்த தண்ணீர் தமிழக எல்லையான ஜீரோ பயிண்டிற்கு வினாடிக்கு 443 கனஅடி வீதம் வந்து கொண்டிருக்கிறது. பூண்டி ஏரிக்கு 364 கனஅடி வீதம் வந்து சேர்கிறது.

    கிருஷ்ணா கால்வாயில் ஆந்திர விவசாயிகள் திறந்து வைத்திருந்த மதகுகள் மூடப்பட்டதால் தண்ணீர் வரத்து மேலும் அதிகரித்து வருகிறது. எனவே பூண்டி ஏரிக்கு வரும் தண்ணீர் படிப்படியாக மேலும் அதிகரிக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீர் தேவைக்காக புழல் ஏரிக்கு நேற்று காலை லிங்க் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது.

    வினாடிக்கு 200 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. அதே போல் பேபி கால்வாயில் 23 கனஅடி வீதம் புழல் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. 3231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி 23.63 அடி தண்ணீர் மட்டம் பதிவாகியது. 660 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.
    Next Story
    ×