search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காமராஜர் சாகர் அணை திறப்பு: மாயார் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு
    X

    காமராஜர் சாகர் அணை திறப்பு: மாயார் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு

    காமராஜர் சாகர் அணையில் இருந்து நேற்று மாலை தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் புலிகள் காப்பகத்தில் உள்ள நீர் நிலைகள் மாயார் ஆறு மூலம் நிறைந்தன.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழை பொய்த்து போனது. இதனால் மாவட்டத்தின் பெரும் பகுதி வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது.

    முதுமலை புலிகள் காப்பகத்தில் யானை, சிறுத்தை, புலி, மான், காட்டெருமை, குரங்குகள் உள்ளிட்ட வன விலங்குகளும், அரிய வகை பறவைகளும் வசித்து வருகின்றன.

    வறட்சியால் நீர்நிலைகள் வறண்டு காணப்படுகிறது. சில குட்டைகளில் மட்டுமே சேறும் சகதியும் நிறைந்த சுகாதாரமற்ற தண்ணீர் உள்ளது. அதனை குடிக்கும் வனவிலங்குகள் ஆந்தராக்ஸ் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் தாக்கி இறந்தன. இது தவிர அந்த பகுதியில் உள்ள கிராமங்களில் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டது.

    இந்நிலையில் காமராஜர் சாகர் அணையில் இருந்து நேற்று மாலை தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் மாயார், சிங்காரா ஆற்றில் விடப்பட்டது. இந்த ஆறுகள் முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் சிறியூர், ஆனைகட்டி, வாழைத்தோட்டம், பொக்காபுரம் ஆகிய கிராமங்கள் வழியே செல்கிறது.

    இதனால் புலிகள் காப்பகத்தில் உள்ள நீர் நிலைகள் மாயார் ஆறு மூலம் நிறைந்தன. கடும் குடிநீர் தட்டுப்பாட்டால் தவித்த வனவிலங்குகளுக்கு போதுமான தண்ணீர் கிடைக்கப்பெற்றுள்ளது. குடிநீருக்காக அலைந்த பொதுமக்களும் நிம்மதியடைந்தனர்.

    காமராஜர் சாகர் அணையில் இருந்து தண்ணீர் கிடைக்கப்பெறாத இடங்களான தெப்பக்காடு- மைசூர் சாலைகளின் இருபுறமும் 20 மீட்டர் தூரத்துக்கு தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணியில் 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×