என் மலர்
செய்திகள்

திருவண்ணாமலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அமெரிக்க வாலிபர் போராட்டம்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் நேற்று போராட்டத்தை தொடங்கினர். தாலுகா அலுவலகம் முன்பு நடந்த இந்த போராட்டம் நேற்று இரவு விடிய விடிய நடந்தது.
இன்றும் அவர்கள் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களின் போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
திருவண்ணாமலையில் இன்று மாணவர்கள் போராட்டத்தில் அமெரிக்க நாட்டை சேர்ந்த கியூ என்பவர் கலந்து கொண்டார். திருவண்ணா மலைக்கு சுற்றுலா வந்த அவரும் தனது கையில் ஜல்லிக்கட்டை வலியுறுத்தும் பதாகை வைத்திருந்தார்.
அவர் கூறும்போது, ‘‘ஜல்லிக்கட்டு விளையாட்டை பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன். பார்த்தும் இருக்கிறேன். பவர்புல் கேம்’’ என்று கூறினார்.
கல்லூரி மாணவர்களை போல பள்ளி மாணவர்களும் போராட்டத்தில் குதித்தனர். திருவண்ணாமலை மாவட்டம் சந்தவாசலில் அரசு பள்ளி மாணவர்கள் இன்று வகுப்புகளை புறக்கணித்தனர். பின்னர் பெற்றோர், பொது மக்களுடன் இணைந்து ஊர்வலம் புறப்பட்டனர்.
கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு தொடங்கிய ஊர்வலம் திருவண்ணா மலை மெயின் ரோட்டை சென்றடைந்தது. அங்கு அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
வந்தவாசி தேரடி காந்தி சிலை எதிரே மாணவர்கள் நேற்று முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று இரவு விடிய விடிய போராட்டம் நடந்தது. 100-க்கும் மேற்பட்டவர்கள் இதில் கலந்து கொண்டனர்.
கலசப்பாக்கம் தாலுகா அலுவலகம் முன்பு மாணவர்கள் இன்று காலை உண்ணாவிரதம் இருந்தனர். குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலை கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து இன்று போராட்டம் நடத்தினர். அவர்கள் ஊர்வலமும் சென்றனர்.