search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான இளைஞர்கள் போராட்டம் 3-வது நாளாக நீடிப்பு
    X

    நெல்லையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான இளைஞர்கள் போராட்டம் 3-வது நாளாக நீடிப்பு

    ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து நெல்லையில் இளைஞர்களின் போராட்டம் 3-வது நாளாக நீடித்து வருகிறது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
    நெல்லை:

    ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க கோரி நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் பாளை., வ.உ.சி., மைதானத்தில் நேற்று முன்தினம் தொடர்போராட்டத்தை தொடங்கினர். மாலையில் தொடங்கிய போராட்டம் கடும் பனியையும் பொருட்படுத்தாமல் இரவிலும் நீடித்தது.

    நேற்றும் இந்த போராட்டம் தொடர்ந்தது. போலீசார் அறிவுறுத்தியும், போராட்டத்தைக் கைவிட்டு மைதானத்தில் இருந்து புறப்பட்டுச் செல்ல இளைஞர்கள் மறுத்தனர். மைதானத்தில் தங்கி உணவு சாப்பிட்டு இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று 3-வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது.

    ஏராளமான இளைஞர்கள் போராட்ட பந்தலிலேயே படுத்து தூங்கினர். இன்று காலையிலும் போராட்டத்தை மாணவர்கள் தொடங்கி உள்ளார்கள். மாணவர்கள் தொடர்போராட்டம் காரணமாக நெல்லை மாவட்டத்தில் சட்டக்கல்லூரி உள்ளிட்ட சில கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.

    இதனால் கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் இன்று வ.உ.சி மைதானத்தில் நடந்த போராட்டத்தில் பங்கேற்றனர். சில கல்லூரிகளில் இருந்து மாணவர்கள் திரண்டு வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு ஊர்வலமாக வ.உ.சி., மைதானத்திற்கு வந்தனர். வக்கீல்கள், முகநூல் நண்பர்கள் குழுவினரும் போராட்டத்தில் திரளாக பங்கேற்றனர். திருநங்கைகளும் போராட்டத்தில் பங்கேற்று கோ‌ஷமிட்டனர்.

    அவர்கள் மத்திய அரசை கண்டித்து கும்மி அடித்து, ஒப்பாரி வைத்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். பாளை தவிர மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது. சங்கரன்கோவிலில் பயணியர் விடுதி அருகே ஏராளமானோர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

    இதே போல வாசுதேவநல்லூர் தீயணைப்பு நிலையம் அருகேயும், சிங்கை அகஸ்தியர்பட்டி மைதானத்திலும் 3-வது நாளாக போராட்டம் தொடர்கிறது. ஏராளமான முகநூல் நண்பர்கள், இளைஞர்கள் திரண்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கோ‌ஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    வீரகேரளம்புதூர் தாலுகா அலுவலகம் முன்பு ஆட்டோ, டாக்சி டிரைவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். வாசுதேவ நல்லூர், ஆலங்குளம், பாவூர்சத்திரம், வி.கே.புரம், சங்கரன்கோவில், தென்காசி, நாங்குநேரி, தாழையூத்து, சேரன்மகாதேவி, பனவடலிசத்திரம், தென்காசி, வள்ளியூர் உட்பட 16 இடங்களில் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டங்களில் இளைஞர்கள் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டங்கள் வலுவடைந்து வருவதால் மாவட்டம் முழுவதும் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
    Next Story
    ×