என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொன்று 4 பவுன் நகை கொள்ளை
    X

    வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொன்று 4 பவுன் நகை கொள்ளை

    கொடுமுடி அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொன்று 4 பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள கரட்டாம் பாளையத்தை சேர்ந்தவர் சேர்ந்தவர் ராமலட்சுமி (வயது 75). இவரது கணவர் அய்யாசாமி. 6 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்.

    ராமலட்சுமி அம்மாளுக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் பெயர் ராதா கிருஷ்ணன். இவர் லாரி புரோக்கராக உள்ளார். இளைய மகன் லட்சுமணன். சிவகிரியில் வங்கி மேலாளராக பணி புரிகிறார்.

    மகன்கள் இருவரும் தனிதனியாக வசித்து வருகிறார்கள். ராமலட்சுமி கரட்டாம்பாளையத்தில் தனியாக வசித்து வந்தார். அவரை 2 மகன்களும் அடிக்கடி வந்து பார்த்து விட்டு செல்வார்கள்.

    நேற்று மாலையும் மகன் ராதாகிருஷ்ணன் தனது தாயாரை பார்த்து விட்டு சென்றார். இன்று (வெள்ளிக்கிழமை) காலையும் தாயார் வீட்டுக்கு வந்தார். அப்போது கதவு நீக்கப்படவில்லை. வழக்கம் போல் ராமலட்சுமி அம்மாள் காலையிலேயே எழுந்து வீட்டை பொறுக்கி சுத்தம் செய்வார்.

    பின்னால் சென்று பார்த்த போது கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்ற ராதாகிருஷ்ணன் அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே ராமலட்சுமி பிணமாக கிடந்தார். இடது காதில் ரத்தம் வடிந்த நிலையில் இருந்தது. அவரது கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் செயின் பறிக்கப்பட் டிருந்தது. மேலும் அவர் காதில் அணிந்திருந்த ஒரு கம்மல் தெறித்து கீழே கிடந்தது.

    ராமலட்சுமி அம்மாள் வீட்டில் தனியாக இருந்ததை நோட்டமிட்ட கொள்ளையர்கள் வீட்டின் பின் பக்க சுவர் ஏறி குதித்து வீட்டுக்குள் நுழைந்துள்ளனர்.

    விட்டில் இருந்த ராமலட்சுமியை அடித்து அவரது தலையை சுவற்றில் மோத விட்டு படுகொலை செய்து உள்ளனர். அதன் பிறகு அவரது கழுத்தில் இருந்த 4 பவுன் செயினை கொள்யைடித்து சென்று உள்ளனர்.

    தடயம் தெரியாமல் இருக்க கீழே மிளகாய் பொடியை தூவி உள்ளனர். இந்த துணிகர கொலை- கொள்ளை சம்பவம் குறித்து கொடுமுடி போலீசில் புகார் செய்யப்பட்டது.

    போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதே போல ராமலட்சுமி வீட்டின் எதிர் வீட்டில் தனியாக குடியிருந்த பாவாத்தாள் என்ற பெண் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கொலை செய்யப்பட்டார். அப்போது கொலையாளிகள் வீட்டில் உள்ள கண்ணாடியில் ‘‘வேட்டை தொடரும்’’ என்று எழுதி இருந்தனர். இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு ஜெயிலில் உள்ளனர்.

    இந்த நிலையில் எதிர் வீட்டில் அதே பாணியில் நேற்று ராமலட்சுமி அம்மாள் கொலை செய்யப்பட்டிருந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×