என் மலர்
செய்திகள்

இலங்கை கடற்படையினர் மீனவர்களை தாக்கி ரூ.1 லட்சம் மதிப்புள்ள மீன்கள், ஜி.பி.எஸ்.கருவி பறிப்பு
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் கோடிக்கரையில் தற்போது மீன்பிடி சீசன் ஆகும். அங்கு மாவட்டத்தின் பலபகுதிகளை சேர்ந்த மீனவர்களும் முகாமிட்டு மீன்பிடித்து வருகின்றனர்.
இந்நிலையில் தரங்கம்பாடி அருகே உள்ள பெருமாள் பேட்டையை சேர்ந்த மீனவர்கள் அன்புராஜ் (வயது 27), கண்ணதாசன் (23), ரவிச்சந்திரன் (30), ஜெகன் (20), ஏலமமுத்து (40), ஆகியோர் ஒரு படகில் சென்று மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். இதேபோல் புதுப்பேட்டையை சேர்ந்த மீனவர்கள் காசிபிள்ளை (50), செல்லையா (39), மகேந்திரன் (33), காளிதாஸ் (40), குமார் (38) ஆகியோர் இன்னொரு படகிலும் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அவர்கள் கோடியக்கரைக்கு தென் கிழக்கே இரவு 8 மணியளவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் அங்கு வந்தனர். அவர்கள் 2 படகுகள் மீதும் மோதியதுடன், மீனவர்களை தாக்கினர். பின்னர் மீனவர்களிடம் இருந்த ஜி.பி.எஸ். கருவி, செல்போன்கள், ரூ.1 லட்சம் மதிப்புள்ள மீன்களையும் பறித்துக்கொண்டு 1 மணியளவில் அங்கிருந்து சென்றுவிட்டனர்.
இதன் பின்னர் கரை திரும்பிய மீனவர்கள் இதுகுறித்து தமிழக கடலோர காவல் படையினரிடம் புகார் செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மீனவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






