என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலைசெய்யப்பட்ட என்ஜினீயர் அறிவழகன் மற்றும் கைதான சுரேகா.
    X
    கொலைசெய்யப்பட்ட என்ஜினீயர் அறிவழகன் மற்றும் கைதான சுரேகா.

    மேடவாக்கம் என்ஜினீயர் கொலையில், மனைவி- கள்ளக்காதலன் கைது

    மேடவாக்கத்தில் என்ஜினீயர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவருடைய மனைவி மற்றும் கள்ளக்காதலனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சென்னை:

    சென்னையை அடுத்த மேடவாக்கம் காந்தி நகர் பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வந்தவர் என்ஜினீயர் அறிவழகன் (35).

    சென்னையில் பிரபல தியேட்டருடன் கூடிய வணிக வளாகத்தில் எலக்ட்ரிக்கல் என்ஜினீயராக வேலை செய்து வந்த இவர் நேற்று முன்தினம் இரவு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். நள்ளிரவு 11.30 மணி அளவில் அறிவழகனின் வீட்டு கதவை தட்டிய கும்பல் கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பியதாக தகவல் வெளியானது. இதனை தடுக்கச் சென்ற மனைவி சுரேகாவுக்கு கத்திக்குத்து விழுந்தது. அவர் ஆஸ்பத்திரியில் மயங்கிய நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    கொலை செய்யப்பட்ட அறிவழகனின் உடல் வீட்டுக்கு வெளியில் கிடந்தது. அவரது உடல் அருகே காலி மதுபாட்டில்களும், பிளாஸ்டிக் டம்ளர்களும் கிடந்தன.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் மேடவாக்கம் உதவி கமி‌ஷனர் கோவிந்த ராஜ், பள்ளிக்கரணை போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது, கையில் காயத்துடன் லேசாக மயங்கிய நிலையில் காணப்பட்ட சுரேகா, ‘‘புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சிலர் மது அருந்தியதை என் கணவர் தட்டிக்கேட்டார். அந்த நபர்களே மீண்டும் வீட்டு அருகில் வைத்து மது அருந்தினர். இதுபற்றி மீண்டும் கேட்டபோது எனது கணவரை குத்திக் கொன்றுவிட்டு தப்பி விட்டனர் என தெரிவித்தார். அவரை காப்பாற்ற சென்ற என்னையும் போதை ஆசாமிகள் கத்தியால் குத்தி விட்டு தப்பிச் சென்று விட்டனர்’’ என்றும் சுரேகா கூறினார்.

    இதையே புகார் மனுவாகவும் போலீசிடம் அவர் அளித்தார். இதனை ஏற்றுக்கொண்ட போலீசார் அது தொடர்பாகவே முதலில் விசாரணை நடத்தினர். ஆனால் சுரேகா கூறியது போல நள்ளிரவு நேரத்தில் கும்பலாக யாரும் அப்பகுதிக்கு வந்தது போன்று தெரியவில்லை. இதனால் போலீசாரின் சந்தேகப்பார்வை சுரேகா மீது விழுந்தது.

    ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த அவரிடம் போலீசார் அதிரடியாக விசாரணை நடத்தினர். அப்போது சுரேகா, அதே பகுதியை சேர்ந்த கணபதி என்கிற சூர்யா என்ற வாலிபரை காதலித்து வந்தது தெரிய வந்தது. அவருடன் சேர்ந்தே கணவர் அறிவழகனை சுரேகா தீர்த்துக் கட்டியிருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து சுரேகாவையும், கள்ளக்காதலன் கணபதியையும் போலீசார் இன்று காலை கைது செய்தனர்.

    அறிவழகனுக்கும், சுரேகாவுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 4 வயதில் சாதனா என்ற பெண் குழந்தை உள்ளது.

    இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர்தான் அதே தெருவில் வசித்து வந்த கணபதியுடன் சுரேகாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதற்கு அறிவழகன் தடையாக இருந்தார்.

    மனைவி சுரேகாவின் நடவடிக்கைகளில் அடிக்கடி சந்தேகம் அடைந்த அறிவழகன் பலமுறை அவரை கண்டித்துள்ளார். இப்படி கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த அறிவழகனை தீர்த்துக்கட்ட சுரேகாவும், கணபதியும் திட்டமிட்டனர். அதன்படியே நேற்று முன்தினம் இரவு கணபதி, அறிவழகனின் வீட்டுக்கு சென்றார்.

    பின்னர் 2 பேரும் சேர்ந்து அறிவழகனை தலையணையால் அமுக்கியும், கத்தியால் குத்தியும் கொலை செய்தனர். ஆனால் குடிபோதையில் இருந்தவர்களே கணவரை கொன்று விட்டதாக சுரேகா நாடகம் ஆடியது தெரிய வந்தது.

    சுரேகாவும், கணபதியும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.

    ஒன்றும் அறியாத 4 வயது குழந்தை சாதனா தவியாய் தவிக்கிறது.
    Next Story
    ×