search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சி அருகே கார் விபத்தில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆலடி அருணாவின் பேத்தி பலி
    X

    திருச்சி அருகே கார் விபத்தில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆலடி அருணாவின் பேத்தி பலி

    திருச்சி அருகே சாலை தடுப்பு சுவரில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆலடி அருணாவின் பேத்தி உயிரிழந்தார்.
    மணப்பாறை:

    சென்னை சேனைவயல் ஆண்டாள் நகரை சேர்ந்தவர் கலைவாணன் (வயது 60). சென்னையில் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பாலாம்பிகை (55). இவர்களது மகள் பிரியதர்ஷினி (26), சென்னை அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வந்த இவருக்கு திருமணமாகி 1½ வயதில் அத்வைதா என்ற பெண் குழந்தை உள்ளது.

    கலைவாணன் நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த மறைந்த முன்னாள் தி.மு.க. அமைச்சர் ஆலடி அருணாவின் தம்பி ஆவார்.

    இந்நிலையில் ஆலடி அருணாவின் நினைவு நாள் நாளை அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி ஆலங்குளத்தில் நாளை மருத்துவ முகாம் நடக்கிறது. இதில் பங்கேற்கும் பொது மக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்வதற்காக கலைவாணன் தனது குடும்பத்தினருடன் நேற்று மாலை சென்னையில் இருந்து ஆலங்குளத்திற்கு ஒரு காரில் புறப்பட்டார். காரை அவரே ஓட்டினார்.

    இன்று அதிகாலை திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே மதுரை- திருச்சி நான்கு வழிச்சாலையில் யாகபுரம் பகுதியில் செல்லும் போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது.

    இதில் காரில் இருந்த கலைவாணன், பாலாம்பிகை, பிரியதர்ஷினி, பெண் குழந்தை அத்வைதா ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பிரியதர்ஷினிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.



    இதுகுறித்த தகவல் அறிந்ததும் துவரங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் காயமடைந்த அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரியதர்ஷினி பரிதாபமாக உயிரிழந்தார்.

    மற்ற அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து நிகழ்ந்தது எப்படி என்று தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நினைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற போது முன்னாள் அமைச்சர் ஆலடி அருணாவின் தம்பி மகள் இறந்த சம்பவம் அவரது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரியதர்ஷினியின் உடலை பார்த்து அவரது கணவர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது நெஞ்சை உருக்கியது. ஆலடி அருணாவின் மகள் பூங்கோதை தற்போது ஆலங்குளம் தொகுதி எம். எல்.ஏ.வாக உள்ளார்.
    Next Story
    ×