search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீக்கராஜபுரத்தில் ஏ.டி.எம். மையம் திறக்கப்பட்ட காட்சி.
    X
    சீக்கராஜபுரத்தில் ஏ.டி.எம். மையம் திறக்கப்பட்ட காட்சி.

    ரொக்கமில்லா பரிவர்த்தனைக்கு மாறும் முதல் கிராமம்

    சீக்கராஜபுரம் ஊராட்சி டிஜிட்டல் கிராமமாக அறிவிக்கப்பட்டு ஏ.டி.எம். மையத்தை பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகள் திறந்து வைத்தனர்.
    ராணிப்பேட்டை:

    மத்திய அரசு 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த மாதத்தில் அறிவித்தது. மேலும் பொதுமக்கள் பணமில்லா பரிவர்த்தனைக்கு மாற ஊக்கப்படுத்தி வருகிறது. இதன் ஒரு அங்கமாக வங்கிகளும், பொதுமக்கள் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இந்த நிலையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 7 கிராமங்களை டிஜிட்டல் கிராமமாக மாற்ற பாரத ஸ்டேட் வங்கி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

    அதன்படி தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டத்தில் காந்தலவாடி, தூத்துக்குடி மாவட்டத்தில் சாத்தான்குளம், திருச்சி மாவட்டத்தில் கரிய மாணிக்கம், அரியலூர் மாவட்டத்தில் வரதராஜன்பேட்டை, நீலகிரி மாவட்டத்தில் தூனேரி, வேலூர் மாவட்டத்தில் சீக்கராஜபுரம், புதுச்சேரியில் திருஆண்டவர் கோவில் ஆகிய 7 கிராமங்களை தேர்ந்தெடுத்து டிஜிட்டல் கிராமமாக மாற்ற பாரத ஸ்டேட் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

    இதன்படி நேற்று சிப்காட்டை அடுத்த சீக்கராஜபுரம் ஊராட்சியில் டிஜிட்டல் கிராமமாக மாற்றும் வகையில் பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம். மையம் திறப்பு விழா மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனை அறிமுக விழா நடைபெற்றது.

    பாரத ஸ்டேட் வங்கி சென்னை வட்டத்தின் முதன்மை பொது மேலாளர் ரமேஷ்பாபு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஏ.டி.எம் மையத்தினை திறந்து வைத்தார்.

    பின்னர் சீக்கராஜபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிக்கு இலவச கம்ப்யூட்டரையும், சீக்கராஜபுரம் பகுதியை சேர்ந்த 15 பேருக்கு பிரதமரின் முத்ரா திட்டத்தின் கீழ் சிறு தொழில் மற்றும் வியாபாரம் செய்வதற்கு கடன் உதவிகளையும் வழங்கினார்.

    துணை பொது மேலாளர் புவனேஸ்வரி டிஜிட்டல் பரிவர்த்தனையின் நன்மைகள் குறித்து பேசினார். பின்னர் மரக்கன்றுகள் நடப்பட்டன.
    Next Story
    ×