search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்தை ஏற்படுத்திய காரை படத்தில் காணலாம்.
    X
    விபத்தை ஏற்படுத்திய காரை படத்தில் காணலாம்.

    தூத்துக்குடியில் பைக் மீது கார் மோதல்: பிளஸ்-2 மாணவி தாயுடன் பலி

    தூத்துக்குடியில் பைக் மீது கார் மோதிய விபத்தில் பிளஸ்-2 மாணவி, அவருடைய தாயுடன் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி சின்னமணி நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 50). மின்வாரியத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு சங்கரேசுவரி என்ற மனைவியும், ராதிகா (17) உள்பட 2 மகள்களும் இருந்தனர். சரவணன் தனது மனைவி, மகள் ராதிகாவுடன் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார்.

    பின்னர் அங்கு இருந்து மோட்டார் சைக்கிளில் 3 பேரும் வீட்டிற்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தனர். தூத்துக்குடி-பாளையங்கோட்டை மெயின் ரோட்டில் உள்ள வேம்படி இசக்கியம்மன் கோவில் அருகே வந்து கொண்டு இருந்த போது, பின்னால் இருந்து தாறுமாறாக வந்த ஒரு கார் திடீரென சரவணன் மோட்டார் சைக்கிளின் பின்னால் பயங்கர வேகத்தில் மோதியது.

    இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் சங்கரேசுவரி, ராதிகா ஆகியோர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர். சரவணன் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார்.

    இது குறித்து தகவலறிந்த தூத்துக்குடி தென்பாகம் போலீசார் விரைந்து வந்து படுகாயம் அடைந்த சரவணனை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் பலியான சங்கரேசுவரி, ராதிகா ஆகியோர் உடல் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

    இந்த விபத்து குறித்து தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர். அதில் காரை ஓட்டி வந்தது தூத்துக்குடி மில்லர்புரத்தை சேர்ந்த ரமேஷ்குமார் (42) என்பவரும், அவர் காரை ஓட்டிய போது குடிபோதையில் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விபத்தில் பலியான ராதிகா பிளஸ்-2 படித்து வந்துள்ளார். அவருக்கு இன்று பிறந்தநாள் என்பதால் மகளுக்கு புத்தாடைகள் எடுப்பதற்காக நேற்று இரவு சரவணன் மனைவி, மகளுடன் ஜவுளி கடைக்கு சென்றுள்ளார்.

    அப்போது தான் விபத்தில் சிக்கி சரவணனின் மனைவி, மகள் பலியாகி விட்டனர். சரவணனின் மற்றொரு மகள் அவர்களுடன் செல்லாததால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள சரவணனுக்கு 2-வது நாளாக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    Next Story
    ×