என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடலூரில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்திய போது எடுத்த படம்.
    X
    கடலூரில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்திய போது எடுத்த படம்.

    கடலூர் மத்திய கூட்டுறவு வங்கியில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் 8 மணி நேரம் சோதனை

    5 நாட்களில் ரூ.51 கோடி டெபாசிட் செய்த விவகாரம் தொடர்பாக கடலூர் மத்திய கூட்டுறவு வங்கியில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் 8 மணி நேரம் சோதனை நடத்தினர்.
    கடலூர்:

    ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி கடந்த நவம்பர் மாதம் 8-ந்தேதி அறிவித்தார்.

    இதையடுத்து பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றுவதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக வருமான வரித்துறைக்கு புகார்கள் வந்தன.

    இது குறித்து சி.பி.ஐ., வருமான வரித்துறை மற்றும் அமலாக்கப்பிரிவுத்துறை அதிகாரிகள் வங்கிகள் மற்றும் தொழில் அதிபர்களின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

    அந்த வகையில் சேலத்தில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 3 நாட்களாக சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

    அதன் தொடர்ச்சியாக கடலூர் வங்கியிலும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.

    கடலூர் பீச்ரோட்டில் கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமை அலுவலகம் உள்ளது. அமலாக்கப்பிரிவு துணை இயக்குனர் ராஜிசேகர் மற்றும் லோமேஷ், ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவர் என மொத்தம் 3 பேர் வங்கியின் தலைமை அலுவலகத்துக்கு வந்தனர். வங்கியில் உள்ள அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்தனர்.

    அப்போது கடந்த மாதம் 8-ந் தேதிக்கு பின்னர் அதிக அளவு பணத்தை டெபாசிட் செய்த வாடிக்கையாளர்களிடம் விசாரணை நடத்தினர்.

    பின்னர் வங்கியின் பாதுகாப்பு பெட்டக அறையில் மூட்டை மூட்டையாக கட்டி வைக்கப்பட்டிருந்த பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை சரிபார்த்தனர். மத்திய கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்துக்கு சென்று, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உதவி பொது மேலாளர் ஜெயசங்கரிடம் விசாரணை நடத்தினர். அப்போது வங்கிகளில் உள்ள அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்தனர். 8 மணி நேரம் இந்த சோதனை நடந்தது.

    தொடர்ந்து அவர்கள் தங்கள் சோதனையை முடித்து விட்டு இரவு 8 மணிக்கு காரில் புறப்பட்டு சென்றனர். சோதனை முடிந்தபின் வங்கியில் இருந்து எந்த ஆவணங்களையும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் எடுத்துச் செல்லவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்த சோதனை குறித்து கூட்டுறவு வங்கி உதவி பொது மேலாளர் ஜெயசங்கர் கூறியதாவது:-

    கடந்த நவம்பர் மாதம் 10-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை 5 நாட்கள் மத்திய கூட்டுறவு வங்கியில் தனிநபர் வங்கி கணக்கில் எவ்வளவு பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. அதில் அதிக பட்சமாக எத்தனை பேர் டெபாசிட் செய்துள்ளனர் என்ற விவரங்களை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரித்தனர்.

    அதேபோல் ஜன்தன் யோஜனா வங்கிக்கணக்கில் எத்தனை பேர் டெபாசிட் செய்துள்ளனர். அதில் அதிக பட்ச தொகை எவ்வளவு என்பதையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். கடந்த நவம்பர் 10-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை ரூ.51 கோடி வசூலானது.

    அந்த தொகையை ரிசர்வ் வங்கியிடம் செலுத்தி விட்டோம். இது குறித்தும் விசாரணை நடத்தினர்.

    மேலும் அதிக அளவில் பணம் டெபாசிட் செய்ததில், சந்தேகமான முறையில் இருந்த 13 பேரை மட்டும் நேரில் அழைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் உரிய ஆவணங்களை காட்டினர். இதையடுத்து அவர்களிடம் எழுதி வாங்கிக்கொண்டு அதிகாரிகள் அனுப்பி விட்டனர்.

    இவ்வாறு உதவி பொது மேலாளர் ஜெயசங்கர் கூறினார்.
    Next Story
    ×