search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வங்கிகளில் இன்றும் பணம் தட்டுப்பாடு: பொதுமக்கள் ஏமாற்றம்
    X

    வங்கிகளில் இன்றும் பணம் தட்டுப்பாடு: பொதுமக்கள் ஏமாற்றம்

    2 நாட்கள் விடுமுறைக்கு பின் இன்று திறக்கப்பட்ட வங்கிகளில் பணம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    சென்னை:

    புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி கடந்த 8-ந்தேதி இரவு அதிரடியாக அறிவித்தார்.

    கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையால் நாடு முழுவதும் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    கைவசம் இருந்த நோட்டுகளை மாற்ற வங்கிகளுக்கு படையெடுத்தனர். அத்தியா வசிய செலவுகள் செய்ய பணம் இல்லாமல் திண்டாடி வருகிறார்கள். புதிய ரூ.2000 நோட்டுகள் மட்டுமே வினியோகிக்கப்படுவதால் சில்லரை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    போதிய அளவிற்கு வங்கிகளிலும், ஏ.டி.எம். மையங்களிலும் பணம் இல்லாததால் மக்கள் பெரும் கஷ்டத்திற்கு ஆளாகி வருகின்றனர். ஏ.டி.எம்.கள் முழுமையாக செயல்படவில்லை.

    வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கியில் இருந்து குறைந்த அளவில் பணம் விநியோகம் செய்யப்படுவதால் பணம் தட்டுப்பாடு உருவாகி பொது மக்கள் மேலும் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

    இதனால் வங்கிகளிலும் ஏ.டி.எம். மையங்களிலும் இன்னும் கூட்டம் குறைய வில்லை.

    பழைய நோட்டுகளை மாற்றுவதற்கான கால அவகாசம் முடிந்து விட்டதால் வங்கி கணக்கு மூலமாக செலுத்தி புதிய நோட்டுகளை பெற முடியும். இதனால் வங்கிகளில் கூட்டம் அலை மோதுகிறது.

    கடந்த 10 நாட்களாக வங்கிகளில் நிலவி வரும் பணம் தட்டுப்பாடு காரணமாக கணக்கில் இருந்து பணம் எடுக்க முடியவில்லை. ஏ.டி.எம்.மில் இருந்து ரூ.2000 மட்டுமே எடுக்க முடிகிறது. என்றாலும் பெரும்பாலான ஏ.டி.எம்.கள் முடங்கி கிடக்கின்றன.

    பணம் தட்டுப்பாட்டையும், சில்லரை தட்டுப்பாட்டையும் சமாளிக்க புதிய 500 ரூபாய் நோட்டு கை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புதிய நோட்டு இன்னும் முழுமையாக வினியோகம் செய்யப்படவில்லை. சென்னையில் ஒரு சில ஏ.டி.எம்.களில் மட்டுமே கிடைத்தது.

    இந்த நிலையில் வங்கிகளுக்கு சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்கள் விடுமுறை விடப்பட்டது. இதனால் வங்கி பண பரிவர்த்தனை முழுமையாக முடங்கின. ஒரு சில ஏ.டி.எம். எந்திரங்கள் மட்டுமே செயல்பட்டதால் அங்கும் நீண்ட வரிசையில் மக்கள் காத்து நின்றனர். 2 நாட்கள் விடுமுறைக்கு பின் வங்கிகள் இன்று திறக்கப்பட்டன.

    வங்கி திறந்தவுடன் பணம் எடுத்தாக வேண்டும் என்ற நிலையில் பல ஆயிரக்கணக்கான மக்கள் காலையிலேயே வங்கி வாசலில் வழக்கம் போல காத்து நின்றனர்.

    20 நாட்களாக நீடித்து வரும் இந்த பணப் பிரச்சினைக்கு இன்றாவது விடிவு கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்புடன் அனைத்து வங்கிகளிலும் மக்கள் குவிந்தனர்.

    அவசர தேவைகளை எதிர் கொள்ள வேண்டியவர்கள் எப்படியாவது பணம் எடுத்தாக வேண்டும் என்ற நிர்பந்தத்தில் காத்து கிடந்தனர்.

    ஆனால் எந்த வங்கியிலும் காலையில் பணம் பட்டுவாடா செய்யப்படவில்லை. வெள்ளிக்கிழமை சிறிது தொகையை இருப்பு வைத்து இருந்த ஒரு சில வங்கிகள் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு ரு.4000 வீதம் வழங்கின.

    பணம் டெபாசிட் செய்யக்கூடியவர்கள், காசோலை பரிமாற்றம் செய்யக்கூடியவர்கள் மட்டுமே வங்கிக்குள் அனுமதிக்கப்பட்டனர். முதலில் வந்து வரிசையில் நின்றவர்களுக்கு மட்டுமே டோக்கன் கொடுத்து உள்ளே அனுப்பினார்கள்.

    பணம் எடுக்க வந்தவர்கள் மதியதற்கு பிறகுதான் பணம் எடுக்க முடிந்தது. 2 நாட்களுக்கு பிறகு மக்கள் வங்கிக்கு வந்து காத்து நின்றும் பணம் கிடைக்காத வேதனையில் வங்கி ஊழியர்களுடன் தகராறில் ஈடுபட்டனர்.

    பொதுமக்கள் ஒன்றாக சேர்ந்து வங்கி ஊழியர்களை முற்றுகையிட்டதால் பல இடங்களில் தள்ளு-முள்ளு ஏற்பட்டது. பாதுகாப்புக்கு நின்ற போலீசாரையும் மீறி மக்கள் ஆவேசத்துடன் வங்கி அதிகாரிகளை சாடினார்கள்.

    வங்கியில் பணம் இல்லை என்று தெரிந்தும் 2 நாட்களாக என்ன செய்தீர்கள். எங்கள் சொந்த பணத்தை எடுப்பதற்கு இவ்வளவு கஷ்டப்படணுமா? வேதனைபடணுமா? என்று மோதல் போக்கில் பேசினார்கள்.

    ஆனாலும் பணம் மக்களின் உணர்வை புரிந்து கொண்ட ஊழியர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திண்டினார்கள். தட்டுப்பாடு இன்றும் நீடித்தது. போதுமான தேவைக்கு பணம் வினியோகம் செய்யப்படாததால் மக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளானார்கள்.

    Next Story
    ×