search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விஷ பாம்பிடம் இருந்து எஜமானரை காப்பாற்றிய நாய்
    X

    விஷ பாம்பிடம் இருந்து எஜமானரை காப்பாற்றிய நாய்

    ஈரோட்டில் விஷ பாம்பிடம் இருந்து எஜமானரின் உயிரை நாய் காப்பாற்றிய சம்பவத்தை அறிந்த அக்கம்பக்கத்தினரும் நாய் ஜானியின் சாதுர்யத்தை பாராட்டினர்.
    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள முத்தையன்கோவில் பகுதியை சேர்ந்தவர் மணி என்கிற தங்கவேல் (வயது 44). விவசாயியான இவர், மணல் லாரி வைத்தும் ஓட்டி வருகிறார். இதற்காக தனது வீட்டில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் அலுவலகம் வைத்துள்ளார். தங்கவேல் தனது வீட்டில் ஜானி என்ற டாபர்மேன் இன நாய் ஒன்றை மிகுந்த பாசத்துடன் வளர்த்து வருகிறார்.

    தங்கவேல் நேற்று முன்தினம் தனது அலுவலகத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்றார். வீட்டை அடைந்ததும், நாய் ஜானி இவரை நோக்கி வேகமாக ஓடி வந்தது. அருகில் வந்ததும் வழக்கத்துக்கு மாறாக பயங்கரமாக குரைக்க தொடங்கியது. அதற்கு சாப்பிட எதுவும் வாங்கி வராததால் இவ்வாறு குரைப்பதாக நினைத்த தங்கவேல், ஜானியை சமாதானப்படுத்த முயன்றார். எனினும் அவரது மோட்டார் சைக்கிளையே பார்த்து குரைத்துக்கொண்டிருந்த ஜானி, அதையே சுற்றி சுற்றி வந்தது. உடனே தங்கவேல் மோட்டார் சைக்கிளை பார்த்தார். அப்போது மோட்டார் சைக்கிளின் இருக்கைக்கு அடியில் இருந்து கொடிய விஷமுள்ள கட்டுவிரியன் பாம்பு ஒன்று தரையில் வந்து விழுந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த தங்கவேல் பதறி ஓடினார். உடனே அந்த பாம்பு அங்கிருந்து வேகமாக ஊர்ந்து சென்றது. ஆனால் அதை துரத்தி சென்று பிடித்த ஜானி, அதை கடித்து குதறியது. இதில் பாம்பு சம்பவ இடத்திலேயே செத்தது.

    மோட்டார் சைக்கிளில் பாம்பு இருந்ததை காட்டி கொடுத்ததுடன், தனது உயிரை காப்பாற்றிய நாய் ஜானியை தங்கவேல் அன்புடன் தடவிக்கொடுத்தார். இந்த சம்பவத்தை அறிந்த அக்கம்பக்கத்தினரும் நாய் ஜானியின் சாதுர்யத்தை பாராட்டினர்.
    Next Story
    ×