search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெய்வேலி அனல்மின் நிலையத்தில் கோளாறு: 8 மாவட்டங்கள் இருளில் மூழ்கியது
    X

    நெய்வேலி அனல்மின் நிலையத்தில் கோளாறு: 8 மாவட்டங்கள் இருளில் மூழ்கியது

    என்.எல்.சி. தெர்மல் முதல் அனல்மின் நிலையத்தில் ‘டிரிப்’ ஆகியதால், மின் உற்பத்தி பணிகள் திடீரென நிறுத்தப்பட்டது. மத்திய மின் தொகுப்பு ஆய்வு மையத்துக்கு மின்சாரம் அனுப்ப முடியாமல் போனதால் 8 மாவட்டங்கள் நேற்று மாலை 5.45 மணிக்கு மேல் திடீர் மின்தடை ஏற்பட்டது.
    நெய்வேலி:

    கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் 3 அனல்மின் நிலையங்கள் இயங்கி வருகின்றன. இங்கு 2,490 மெகாவாட் அளவில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் மத்திய மின் தொகுப்பு ஆய்வு மையத்துக்கு அனுப்பப்பட்டு. அங்கிருந்து தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று மாலை 5.30 மணியளவில் மத்திய மின் தொகுப்பு ஆய்வு மையத்துக்கு மின்சாரம் அனுப்பும் மின்பாதையில் திருச்சிக்கும் அரியலூருக்கும் இடையே சிங்காரத்தோப்பு என்ற இடத்தில் திடீரென உயர் மின் அழுத்தம் ஏற்பட்டது.

    இதனால் என்.எல்.சி. தெர்மல் முதல் அனல்மின் நிலையத்தில் ‘டிரிப்’ ஆகியதால், மின் உற்பத்தி பணிகள் திடீரென நிறுத்தப்பட்டது.

    இங்கிருந்து மத்திய மின் தொகுப்பு ஆய்வு மையத்துக்கு மின்சாரம் அனுப்ப முடியாமல் போனதால் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி ஆகிய 8 மாவட்டங்கள் நேற்று மாலை 5.45 மணிக்கு மேல் திடீர் மின்தடை ஏற்பட்டது.

    இதனால் நகரம் இருளில் மூழ்கியது. மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளானார்கள். பஸ் நிலையங்களில் மக்கள் தவித்தனர்.

    இதையடுத்து என்.எல்.சி.தொழில்நுட்ப அதிகாரிகள் தீவிரமாக செயல்பட்டு பழுதை நீக்கினர்.

    இதையடுத்து கடலூர் மாவட்டத்தில் இரவு 8.45 மணி முதல் படிப்படியாக மின்வினியோகம் தொடங்கியது. இரவு 10 மணிக்கு மேல் அனைத்து மாவட்டங்களுக்கும் மின் வினியோகம் வழங்கப்பட்டது.

    இந்த திடீர் கோளாறு எதனால் ஏற்பட்டது என்று அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×