search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குற்றால அருவிகளில் குளிக்கும்போது எண்ணெய், சீயக்காய், ஷாம்பு பயன்படுத்த தடை நீடிப்பு
    X

    குற்றால அருவிகளில் குளிக்கும்போது எண்ணெய், சீயக்காய், ஷாம்பு பயன்படுத்த தடை நீடிப்பு

    குற்றால அருவிகளில் குளிக்கும்போது எண்ணெய், சீயக்காய், ஷாம்பு போன்றவற்றை பயன்படுத்துவதற்கான தடை நீடிக்கும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    மதுரை:

    நெல்லை மாவட்டத்தில் உள்ள குற்றால அருவிகளில் குளிக்கும்போது சோப்பு, ஷாம்பு, சீயக்காய் பயன்படுத்தவும், எண்ணெய் குளியல் மேற்கொள்ளவும் தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு கிளை ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

    இந்த தடையை நீக்க வேண்டும் என்று ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

    அந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, எம்.வி.முரளிதரன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது குற்றாலத்தில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டியவை பற்றியும், கோர்ட்டின் வழிகாட்டுதல்களை பின்பற்றுவதில் உள்ள சிக்கல்கள் குறித்தும் அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

    சுற்றுச்சூழல் நிபுணர்கள் குழுவின் அறிவுரைப்படி குற்றால அருவிகளில் எண்ணெய், சீயக்காய், சோப்பு, ஷாம்பு பயன்படுத்துவதற்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்படுகிறது.

    உள்ளூர்வாசிகளுக்கு மட்டும் சீயக்காய், எண்ணெய் விற்பனை செய்யலாம் என்று கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. ஆனால் சுற்றுலா பயணிகள், உள்ளூர்வாசிகள் என்று வேறுபடுத்துவது கடினம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளதால் அருவிகளுக்கு அருகில் ஷாம்பு, சீயக்காய், எண்ணெய், பிளாஸ்டிக் பொருட்கள் விற்க தடை விதிக்கப்படுகிறது.

    அருவிகள் உள்ள இடத்தில் இருந்து 1½ கிலோ மீட்டர் தூரத்துக்குள் டாஸ்மாக் கடைகளை அனுமதிக்கக் கூடாது. ஆயிரப்பேரி ஊராட்சி மற்றும் குற்றாலம் பேரூராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது.

    இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    இந்த உத்தரவை முறையாக அமல்படுத்தி அதுதொடர்பான அறிக்கையை 6 மாதங்களில் தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
    Next Story
    ×