என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாமியார் கொலை: மருமகள், கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை
    X

    மாமியார் கொலை: மருமகள், கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை

    கள்ளக்காதலை கண்டித்த மாமியாரை அம்மிகுழவியால் கழுத்தை நசுக்கி கொலை செய்த மருமகள் மற்றும் அவரது கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கடலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
    கடலூர்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள சிறகிழந்தநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 37). இவர் சவுதி அரேபியாவில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அம்சவல்லி (33) என்ற மனைவியும், புவனேஷ் (6), யோகேஷ் (3) ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.

    லட்சுமணனின் தம்பி இளவரசன் (32) திருப்பூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவர் அவ்வப்போது ஊருக்கு வந்து செல்வார். இளவரசனின் நண்பர் அதே பகுதியை சேர்ந்த காளிரத்தினம் (23) அடிக்கடி லட்சுமணன் வீட்டுக்கு வந்து செல்வார். வீட்டு வேலைகளையும் செய்து கொடுப்பார்.

    இதனால் அம்சவல்லிக்கும், காளிரத்தினத்துக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர்.

    சம்பவத்தன்று இரவு அம்சவல்லி வழக்கம்போல தனது குழந்தைகளுடன் ஒரு அறையில் படுத்து தூங்கினார். மற்றொரு அறையில் அவரது மாமியார் மீனாட்சி (57) படுத்திருந்தார். இரவு 11 மணியளவில் தோட்டத்துக்கு செல்வதற்காக எழுந்த மீனாட்சி மின் விளக்கை போட்டார். அப்போது அம்சவல்லியும், அவரது கள்ளக்காதலன் காளிரத்தினமும் ஒன்றாக இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் 2 பேரையும் கண்டித்தார்.

    இதுபற்றி வெளிநாட்டில் இருக்கும் தனது மகன் லட்சுமணனிடமும் தெரிவிப்பதாக அவர் கூறினார். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த காளிரத்தினம் மீனாட்சியை கீழே பிடித்து தள்ளியதில் அவர் மயங்கி விழுந்தார். மீனாட்சியை இப்படியே விட்டால், கள்ளக்காதல் விவகாரம் அனைவருக்கும் தெரிந்துவிடும் என்பதால் அவரை கொலை செய்ய 2 பேரும் முடிவு செய்தனர்.

    மீனாட்சியின் இரு கால்களையும் அம்சவல்லி பிடித்துக்கொள்ள, காளிரத்தினம் வீட்டில் இருந்த அம்மிக்குழவியை எடுத்து அவரது கழுத்தில் வைத்து நசுக்கினார். சத்தம் கேட்காமல் இருப்பதற்காக டி.வி.யை சத்தமாக வைத்தனர். இந்த சத்தம் கேட்டு அம்சவல்லியின் மகன் புவனேஷ் விழித்து எழுந்து அழுதான். அம்சவல்லி அவனை சமாதானப்படுத்தினார். அவன் கண் எதிரே மீனாட்சியை இருவரும் துடிதுடிக்க கொலை செய்தனர்.

    மீனாட்சி இறந்ததும் காளிரத்தினம் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். மறுநாள் காலையில் கொலையை மறைப்பதற்காக அம்சவல்லி அக்கம்பக்கத்தினரிடம் மாமியார் மீனாட்சி நெஞ்சுவலியால் இறந்துவிட்டதாக கூறினார். வெளியூரில் உள்ள உறவினர்களுக்கு போன் மூலமாகவும் தகவல் கொடுத்து நம்பவைத்தார்.

    தாய் இறந்தது பற்றி அறிந்த இளவரசன் திருப்பூரில் இருந்து வீட்டுக்கு வந்தார். வீட்டில் இருந்த சில அறிகுறிகளும், மீனாட்சியின் கழுத்தில் இருந்த காயமும் அவருக்கு தாயின் சாவில் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து குமராட்சி போலீஸ் நிலையத்தில் இளவரசன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அம்சவசல்லியையும், காளிரத்தினத்தையும் பிடித்து விசாரித்தனர்.

    ஆனால் அவர்கள் தாங்கள் கொலை செய்யவில்லை என மறுத்தனர். இதையடுத்து அம்சவல்லியின் மகன் புவனேசை தனியாக அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது அவன் அம்சவல்லியும், காளிரத்தினமும் சேர்ந்து தனது பாட்டியை கொலை செய்ததாக கூறினான். அதன்பின்னர் அம்சவல்லியும், காளிரத்தினமும் மீனாட்சியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

    இந்த வழக்கு கடலூர் மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. சிறுவன் புவனேஷ் கோர்ட்டிலும் சாட்சி அளித்தான். இந்த வழக்கில் நேற்று அம்சவல்லி, அவரது கள்ளக்காதலன் காளிரத்தினம் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இருவரையும் போலீசார் கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×