என் மலர்
செய்திகள்

மயிலாடுதுறை அருகே ரவுடி வெட்டிக்கொலை: போலீசார் விசாரணை
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை அருகே செஞ்சிதேவர் மகன் மனோகரன்(வயது 43), இவர் ரவுடி மணல்மேடு சங்கரின் நண்பர் ஆவார். இவர் மீது ஆத்தூர் கண்ணையன் என்பவரை கொலை செய்த வழக்கு உள்ளது.
மேலும் இவர் மீது கொலை, கொள்ளை முயற்சி என பல்வேறு வழக்குகள் உள்ளன.இந்நிலையில் கடலங்குடி பாலம் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் இன்று அதிகாலை மனோகரன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் மனோகரனை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் மணல்மேடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மனோகரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மனோகரன் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலை செய்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
மயிலாடுதுறை அருகே ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






