என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாணவன் பிரதாப், அவரது தாயார் பிரவீனா ஆகியோர் ஸ்கேன் பரிசோதனை முடிவை காட்டினர்.
    X
    மாணவன் பிரதாப், அவரது தாயார் பிரவீனா ஆகியோர் ஸ்கேன் பரிசோதனை முடிவை காட்டினர்.

    கடலூரில் ஆசிரியர் தாக்கியதில் மாணவன் காது செவிடானது

    கடலூரில் சீருடை அணியாமல் பள்ளிக்கு சென்றதால் ஆத்திரத்தில் ஆசிரியர் தாக்கியதில் மாணவன் காது செவிடான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கடலூர்:

    கடலூர் துறைமுகம் சுனாமி நகரை சேர்ந்தவர் பொற்செழியன். இவரது மனைவி பிரவீனா. இவர்களது மகன் பிரதாப்(வயது 15). கடலூர் கடற்கரை சாலையில் உள்ள நகராட்சி பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இன்று காலை பிரவீனாவும், பிரதாப்பும் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். டாக்டர்களிடம் நகராட்சி பள்ளி ஆசிரியர் தாக்கியதால் பிரதாப்புக்கு காது கேட்கவில்லை. அவனுக்கு சிகிச்சை அளிக்கவேண்டும் என்று பிரவீனா கூறினார்.

    இதையடுத்து டாக்டர்கள் மாணவர் பிரதாப்பை ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுதொடர்பாக பிரவீனா நிருபர்களிடம் கூறியதாவது:-

    என் மகன் பிரதாப் நகராட்சி பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த 3-ந் தேதி மழை பெய்தது. அவனது பள்ளி சீருடை நனைந்து விட்டதால் எனது மகன் சீருடை அணியாமல் வேறு உடை அணிந்து பள்ளிக்கு சென்றான்.

    அப்போது உடற்கல்வி ஆசிரியர் அவனிடம் ஏன் சீருடை அணியாமல் வந்தாய்? என்று கேட்டு பரீட்சை எழுதும் அட்டையால் தலையில் தாக்கியுள்ளார். மேலும் கன்னத்திலும் அறைந்திருக்கிறார். இதையடுத்து பிரதாப் அன்று இரவு 7 மணிக்கு தான் வீட்டுக்கு வந்தான். வீட்டின் அருகே மயங்கி விழுந்து விட்டான்.

    உடனே அவனை கடலூர் முதுநகரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றோம். டாக்டர்கள் பரிசோதித்து பார்த்துவிட்டு காதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.

    பின்னர் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து காட்டினோம். பிரதாப்புக்கு டாக்டர்கள் ஸ்கேன் எடுத்து பார்த்தனர். பிரதாப்புக்கு 85 சதவீதம் காதுகேட்கும் திறன் குறைந்துள்ளது என்று தெரிவித்தனர்.

    இதையடுத்து மீனவர் அமைப்பை சேர்ந்தவர்களுடன் நகராட்சி பள்ளிக்கு சென்று நியாயம் கேட்டேன். அப்போது ஆசிரியர்கள் அரசு ஆஸ்பத்திரியில் சரியாக ஸ்கேன் எடுத்து பார்த்திருக்கமாட்டார்கள்.

    தனியார் ஆஸ்பத்திரியில் ஸ்கேன் எடுத்து பாருங்கள் என்று கூறி ரூ.5 ஆயிரம் கொடுத்தனர். அதை பெற்றுக்கொண்டு நான் தனியார் ஆஸ்பத்திரியில் பிரதாப்புக்கு ஸ்கேன் எடுத்து பார்த்தேன். அப்போது டாக்டர்கள் பிரதாப்புக்கு காது கேட்கும் திறன் குறைந்து விட்டது என்று உறுதியாக தெரிவித்தனர்.

    இதைத் தொடர்ந்து கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்ய சென்றேன். ஆனால் போலீசார் புகார் மனுவை வாங்க மறுத்தனர்.

    நகராட்சி பள்ளி ஆசிரியர்களிடம் ரூ.5 ஆயிரம் பெற்றுக்கொண்டு பிரச்சனையை நாங்கள் பேசி முடித்துவிட்டதாக போலீசார் எங்களிடம் தெரிவித்தனர். நான் அவர்களிடம் சிகிச்சைக்காக தான் ரூ.5 ஆயிரம் பெற்றேன்.

    பிரச்சனை பேசி முடிக்கப்படவில்லை என்று கூறினேன். ஆனால் அதை போலீசார் ஏற்கவில்லை.

    இதையடுத்து ரூ.5 ஆயிரம் பணத்தை திரட்டி மீனவர் சமுதாயத்தை சேர்ந்தவர்களுடன் நகராட்சி பள்ளிக்கு சென்று ஆசிரியர்களிடம் பணத்தை கொடுக்க முயன்றேன். ஆனால் அவர்கள் ஏற்கவில்லை. எனக்கு அங்கு நியாயம் கிடைக்கவில்லை.

    கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக என் மகனை சேர்த்துள்ளேன். என் மகனை தாக்கிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×