என் மலர்
செய்திகள்

காரைக்குடி அருகே மோட்டார் சைக்கிள் விபத்து: புதுமாப்பிள்ளை-வாலிபர் பலி
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள பொய்யாவயல் கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது27). இவரது மனைவி கனிமொழி (19). இவர்களுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்த தீபாவளி அவர்களுக்கு தலைதீபாவளி என்பதால் பாலமுருகன் மனைவியுடன் அவரது சொந்த ஊரான விலாவடியேந்தலுக்கு சென்றார். அங்கு சந்தோஷமாக தலை தீபாவளி கொண்டாடிய இருவரும் மாலையில் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு புறப்பட்டனர்.
நேற்று இரவு 7 மணியளவில் மித்ரங்குடி பகுதியில் வந்தபோது எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். எதிர்பாராதவிதமாக இந்த 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதி கொண்டன.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள்களை ஓட்டி வந்த பாலமுருகன், ஆயினிபட்டி அய்யாவு என்ற ரமேஷ் (27) ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
கனிமொழி உள்பட 2 பேர் காயத்துடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக காரைக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். தலை தீபாவளி முடித்து திரும்பிய வாலிபர் மனைவி கண் முன்பு பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விபத்து குறித்து சாக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.






