search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொன்னேரி பகுதியில் மர்ம காய்ச்சல்: கிராம அதிகாரிகளுடன் மருத்துவ குழுவினர் ஆலோசனை
    X

    பொன்னேரி பகுதியில் மர்ம காய்ச்சல்: கிராம அதிகாரிகளுடன் மருத்துவ குழுவினர் ஆலோசனை

    பொன்னேரி பகுதியில் மர்ம காய்ச்சலை கட்டுப்படுத்த 55 கிராம அதிகாரிகளுடன் மருத்துவ குழுவினர் ஆலோசனை நடத்தினர்.
    பொன்னேரி:

    திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 2 மாதமாக மர்ம காய்ச்சல் பாதிப்பு உள்ளது. மருத்துவ குழுவினரின் தீவிர நடவடிக்கையால் காய்ச்சல் கட்டுக்குள் இருந்தது.

    இந்த நிலையில் பொன்னேரி பகுதியில் மீண்டும் மர்ம காய்ச்சல் பரவி உள்ளது. சின்னம்பேடு நந்தியம் பாக்கம், ஆண்டார்குப்பம், மீஞ்சூர், பொன்னேரி, வேலூர், பிரளயம்பாக்கம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    அவர்களில் 56 பேர் பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதில் 8 பேர் சிறுவர்-சிறுமிகள் ஆவர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதற்கிடையே மர்ம காய்ச்சலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது. மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் 55 ஊராட்சி செயலாளர்களுடன் வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுதேவன், கிராம வளர்ச்சி அலுவலர் கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    அப்போது மர்ம காய்ச்சல் பரவிய கிராமங்களில் தூய்மை பணி மற்றும் வீடுகள்தோறும் நிலவேம்பு கசாயம் வழங்க முடிவு செய்யப்பட்டது. மருத்துவ குழுவினரும் கிராம அதிகாரிகளுக்கு காய்ச்சலை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்கினர்.

    இந்த நிலையில் இன்று காலை பழவேற்காடு, பிரவியம்பாக்கம், நாலூர், வேலூர் கிராமத்தில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. கால்வாய்களை சீரமைத்து பிளீச்சிங் பவுடர் தூவினர். மேலும் பொது மக்களிடம் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைக்க அறிவுறுத்தினர்.

    இது குறித்து மீஞ்சூர் வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ் கூறும்போது, ‘ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு சாதாரண வைரஸ் காய்ச்சல் தான். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. காய்ச்சல் குறித்து பொது மக்கள் பயப்பட தேவையில்லை’ என்றார்.
    Next Story
    ×