search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரக்கோணம், ஆம்பூர், திருவண்ணாமலையில் விடுதலை சிறுத்தைகள்- த.மா.கா. ரெயில் மறியல்: 150 பேர் கைது
    X

    அரக்கோணம், ஆம்பூர், திருவண்ணாமலையில் விடுதலை சிறுத்தைகள்- த.மா.கா. ரெயில் மறியல்: 150 பேர் கைது

    அரக்கோணம், ஆம்பூர், திருவண்ணாமலையில் ரெயில் மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் 150 பேரை போலீசார் கைது செய்தனர்.
    வேலூர்:

    காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசை கண்டித்து, வேலூர், திருவண்ணாமலையில் 2-வது நாளாக ரெயில் மறியல் போராட்டம் நடந்தது.

    காட்பாடி ரெயில் நிலையத்தில் முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தி.மு.க.வினர் நேற்று ரெயில் மறியல் செய்தனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், துரைமுருகன் உள்பட ஏராளமான தி.மு.க.வினரை கைது செய்தனர்.

    அதேபோல், திருவண்ணாமலையில் நேற்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு உள்பட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் ஏராளமான தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர்.

    இதையடுத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் உள்பட மக்கள் நலக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தி இன்று ரெயில் மறியல் செய்தனர்.

    அரக்கோணம் ரெயில் நிலையத்தில் இன்று காலை 9 மணிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் வணிகர் சங்கத்தினர் மறியல் செய்வதற்காக குவிந்தனர். இதையொட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

    அப்போது, சென்னையில் இருந்து பெங்களூர் சென்ற பிருந்தாவனம் எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும், வணிகர் சங்கத்தினரும் மத்திய அரசுக்கு எதிராக கோ‌ஷம் எழுப்பினர்.

    ரெயில் மறியல் செய்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் கவுதம், தமிழ்மாறன், கருணாகரன், பொன்.பெருமாள் உள்பட 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

    அதேபோல், ஆம்பூர் ரெயில் நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சியினர் ரெயில் மறியல் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    திருவண்ணாமலை ரெயில் நிலையத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் இன்று காலை 9.30 மணிக்கு திருப்பதியில் இருந்து மன்னார்குடி சென்ற ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது, ‘‘மத்திய அரசே, மத்திய அரசே காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைத்திடு’’ என்ற முழக்கங்களை எழுப்பினர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், ரெயில் மறியல் செய்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் 50-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.
    Next Story
    ×