search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைகை அணையில் தண்ணீர் திறப்பு: 40 கன அடியாக குறைப்பு
    X

    வைகை அணையில் தண்ணீர் திறப்பு: 40 கன அடியாக குறைப்பு

    வைகை அணையில் இருந்து மதுரை மாவட்டத்துக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு 40 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளதால் அங்கு மேலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

    ஆண்டிப்பட்டி:

    வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு பாசனத்திற்கும் மற்றும் குடிநீருக்கும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. பருவ மழை கை கொடுக்காத நிலையில் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து குறைந்து கொண்டே வந்தது. 71 அடி உயரமுள்ள அணையில் தற்போது 23 அடியே தண்ணீர் உள்ளது.

    அதிலும் 12 அடி வண்டல் மண் படிந்துள்ளதால் 13 அடி மட்டுமே தண்ணீர் உள்ளது. அணையின் நீர் மட்டம் தொடர்ந்து குறைந்து வந்தபோதும் வைகை அணையில் இருந்து தினசரி மதுரை மாநகர குடிநீர் தேவைக்காக 60 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

    வடகிழக்கு பருவ மழை இன்னும் தொடங்காததாலும் அணைக்கு நீர் வரத்து இல்லாததாலும் தற்போது திறந்து விடப்படும் தண்ணீரின் அளவை மேலும் குறைக்க பொதுப் பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன் படி மதுரை குடிநீருக்கு 60 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று 40 கன அடியாக அது குறைக்கப்பட்டது.

    ஏற்கனவே மதுரை மாநகருக்கு தற்போது 4 நாட்களுக்கு ஒரு முறைதான் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வைகை அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு மேலும் குறைக்கப்பட்டுள்ளதால் அங்கு மேலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

    இது ஒரு புறம் இருக்க ஆண்டிப்பட்டி அருகில் உள்ள முதலக்கம்பட்டியில் மதுரைக்கு செல்லும் குடிநீர் குழாயை உடைத்து சிலர் தங்கள் விவசாய தோட்டங்களுக்கு தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர்.

    தண்ணீர் பற்றாக்குறை காரணமாக சிலர் மதுரைக்கு செல்லும் குடிநீரைத் திருடி விவசாயத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர். இது போன்ற தண்ணீர் திருட்டை தடுக்க அதிகாரிகள் மற்றும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    Next Story
    ×