என் மலர்
செய்திகள்

தேவகோட்டையில் 3 கொள்ளையர்கள் கைது
தேவகோட்டை:
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சமீபகாலங்களில் அடிக்கடி கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வந்தன. பந்தல் காண்டிராக்டர், பேராசிரியை உள்பட பலர் வீடுகளில் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.
இதனை தொடர்ந்து கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். வாகன சோதனையும் நடத்தப்பட்டது. தேவகோட்டை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன், சப்-இன்ஸ்பெக்டர் முகமது சாதிக் தலைமையிலான போலீசார் நகர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது 3 பேர் தனித்தனி மோட்டார் சைக்கிள்களில் அங்கு வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அவர்களது கேள்விகளுக்கு 3 பேரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.
இதனை தொடர்ந்து அவர்களை போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். அப்போது அவர்கள் 3 பேரும் கொள்ளையர்கள் என தெரியவந்தது. இதன்பேரில் 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அவர்களது பெயர் புதுவயல் முருகேசன் (35), பிரம்புவயல் ராஜா என்ற வீரமணிராஜா (40), சிறுகவயல் சண்முக பிரகாஷ் (22) என தெரியவந்தது. இவர்கள் தேவகோட்டை, ஆறாவயல், பள்ளத்தூர் பகுதிகளில் வீடு புகுந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது விசாரணையில் கண்டறியப்பட்டது.
அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் ரூ.25 லட்சம் மதிப்பிலான நகைகள், 2 எல்.சி.டி. டி.வி.க்கள், 3 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ரூ.75 ஆயிரம் மீட்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






