search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரையில் ரெயில் மறியலுக்கு முயன்ற போராட்டக்காரர்களுடன் போலீசார் தள்ளுமுள்ளு -100 பேர் கைது
    X

    மதுரையில் ரெயில் மறியலுக்கு முயன்ற போராட்டக்காரர்களுடன் போலீசார் தள்ளுமுள்ளு -100 பேர் கைது

    மதுரையில் இன்று ரெயில் மறியல் செய்ய முயன்ற போராட்டக்காரர்களுடன் போலீசார் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் 100 பேர் கைது செய்யப்பட்டனர்.

    மதுரை:

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும் இன்று ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று பல்வேறு அமைப்புகள் அழைப்பு விடுத்து இருந்தன.

    அதன்படி திராவிடர் விடுதலை கழகம், மக்கள் விடுதலை கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, ஆதிதமிழர் பேரவை, தமிழ்ப்புலிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம், எஸ்.டி.பி.ஐ., தமிழ் தேசிய மக்கள் கட்சி உள்ளிட்ட 20-க்கும் மேற் பட்ட அமைப்புகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் மதுரை கட்டபொம்மன் சிலை அருகில் கூடினார்கள்.

    அங்கிருந்து தமிழ்புலிகள் கட்சியின் நிறுவன தலைவர் நாகை திருவள்ளுவன், மக்கள் விடுதலை கட்சி தலைவர் பாண்டியன் ஆகியோர் தலைமையில் ரெயில் நிலையம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். அப்போது மத்திய அரசே தமிழகத்தை வஞ்சிக்காதே, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திடு, உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்திடு உள்பட பல கோ‌ஷங்களை அவர்கள் எழுப்பியவாறு மதுரை ரெயில் நிலைய கிழக்கு நுழைவு வாயில் அருகில் வந்தனர்.

    இந்த போராட்டத்தையொட்டி ரெயில் நிலைய நுழைவு வாயில் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. போராட்டக்காரர்கள் ரெயில் நிலையத்திற்குள் நுழைந்துவிட முடியாதபடி ஏராளமான பேரிகார்டு தடுப்புகளையும் போலீசார் அமைத்து இருந்தனர்.

    ரெயில் நிலைய நுழைவு வாயில் அருகே திரண்டு இருந்த போராட்டக்காரர்கள் திடீரென்று பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், எச்.ராஜா ஆகியோரது உருவப்படங்களை தீ வைத்து எரித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    பின்னர் ஊர்வலத்தில் வந்தவர்கள் ரெயில் மறியலில் ஈடுபடுவதற்காக ரெயில் நிலையத்திற்குள் நுழைய முயன்றனர். போலீசார் தடுப்புகளால் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். இதையும் மீறி போராட்டக்காரர்கள், தடுப்புகளில் ஏறி முன்னேறி செல்ல முயன்றபோது அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    நிலைமை மோசமாகவே போராட்டக்காரர்களை விரட்டி விட்டனர். இதன் காரணமாக ரெயில் நிலையம் அருகில் உள்ள மேலவெளி வீதி ரோடு போர்க்களம் போன்று காணப்பட்டது. பின்னர் ரெயில் மறியலுக்கு முயன்ற பெண்கள் 100 பேரை போலீசார் கைது செய்து பஸ்சில் ஏற்றினார்கள்.

    Next Story
    ×