என் மலர்tooltip icon

    செய்திகள்

    உள்ளாட்சி தேர்தல்: கடலூர் மாவட்டத்தில் தி.மு.க.-வி.சிறுத்தை கூட்டணி
    X

    உள்ளாட்சி தேர்தல்: கடலூர் மாவட்டத்தில் தி.மு.க.-வி.சிறுத்தை கூட்டணி

    விடுதலை சிறுத்தைகளின் கோரிக்கைகள் குறித்து தி.மு.க. நிர்வாகிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். விடுதலை சிறுத்தை கட்சிக்கு எந்த வார்டுகளை ஒதுக்குவது என்று ஆலோசிக்கப்பட்டு இன்று மாலை அதன் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    கடலூர்:

    தமிழகத்தில் வருகிற 17-ந் மற்றும் 19-ந் தேதிகளில் 2 கட்டமாக உள்ளாட்சி நடைபெற உள்ளது.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுமே அ.தி.மு.க. அதிரடியாக களத்தில் இறங்கியது. மாநகராட்சி மற்றும் மாவட்ட பஞ்சாயத்து வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்தது.

    தேர்தல் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தி.மு.க.- காங்கிரஸ் இடையே உடன்பாடு ஏற்படுவதில் சிக்கல் எழுந்துள்ளது.

    இந்தநிலையில் தேர்தலில் வெற்றிக்கனியை பறிக்க அரசியல் கட்சிகள் காய்களை நகர்த்த தொடங்கியுள்ளன.

    கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, நெல்லிக்குப்பம், சிதம்பரம், விருத்தாசலம் ஆகிய 5 நகரசபைகள் உள்ளன. இந்த நகரசபைகளில் தற்போது அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள் தலைவர்களாக உள்ளனர்.

    மீண்டும் இந்த நகரசபைகளை தக்கவைத்துக் கொள்ள அ.தி.மு.க. தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

    இந்தநிலையில் 5 நகரசபைகளையும் கைப்பற்ற தி.மு.க. முடிவு செய்துள்ளது. இதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் தி.மு.க. வலுவாக உள்ளது.

    அதேபோல் விடுதலை சிறுத்தை கட்சியினரும் அதிக செல்வாக்குடன் உள்ளனர். தி.மு.க.வும், விடுதலை சிறுத்தை கட்சியினரும் உள்ளாட்சி தேர்தலில் கடலூர் மாவட்டத்தில் கூட்டணி அமைத்தால் அமோக வெற்றி பெறலாம் என்று மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் தீர்மானித்தனர்.

    தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் உள்ளன. மக்கள் நலக்கூட்டணியில் ம.தி.மு.க., விடுதலை சிறுத்தை கட்சி, கம்யூனிஸ்டு கட்சிகள் உள்ளன.

    ஆனாலும் கடலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற வசதியாக தி.மு.க., விடுதலை சிறுத்தை கட்சி கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளனர். அதன்படி 2 கட்சிகளின் உயர்மட்டத் தலைவர்கள் சந்தித்து பேசினார்கள்.

    அப்போது விடுதலை சிறுத்தை கட்சிகள் சார்பில் சில நிபந்தனைகள் வைக்கப்பட்டன. கடலூர் நகராட்சியில் 6 வார்டு, ஒரு துணைத்தலைவர் பதவி, நெல்லிக்குப்பம் நகரசபையில் 6 வார்டுகள், துணைத்தலைவர் பதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    இதேபோல் விருத்தாசலம், சிதம்பரம் ஆகிய நகரசபைகளிலும் தலா ஒரு வார்டு தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். பண்ருட்டி நகராட்சியில் எந்த வார்டுகளையும் அவர்கள் கேட்கவில்லை.

    விடுதலை சிறுத்தைகளின் கோரிக்கைகள் குறித்து தி.மு.க. நிர்வாகிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். விடுதலை சிறுத்தை கட்சிக்கு எந்த வார்டுகளை ஒதுக்குவது என்று ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இன்று மாலை அதன் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுதொடர்பாக தி.மு.க.தரப்பில் கூறும் போது, கடலூர் மாவட்டத்தில் விடுதலை சிறுத்தைகளுடன் கூட்டணி அமைத்து 5 நகரசபைகளையும் கைப்பற்றுவோம்.

    மேலும் பேரூராட்சி, மாவட்ட பஞ்சாயத்து தேர்தலிலும் விடுதலை சிறுத்தை கட்சியுடன் உடன்பாடு வைத்துக்கொள்வது குறித்து பேச்சு வார்த்தை நடைபெறுகிறது.
    Next Story
    ×